பொறுப்பில் இல்லாத சசிகலாவை முதல்வர் ஓபிஎஸ் எப்படி சந்திக்கலாம்? வெடிக்கும் புதிய பஞ்சாயத்து
அதிமுகவில் எந்த ஒரு பொறுப்பிலுமே இல்லாத தனிநபர் சசிகலாவை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேரடியாக போய் சந்திப்பது எப்படி மரபாகும்? என்ற புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
சென்னை: அதிமுகவில் எந்த ஒரு பொறுப்பிலுமே இல்லாத அதுவும் அடிப்படை உறுப்பினராக இருக்கிறாரா? என்பது கூட தெரியாத சசிகலா என்ற தனிநபரை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேரில் சென்று சந்திப்பது எப்படி மரபாகும்? என்ற புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
2011-ம் ஆண்டு அதிமுகவில் தலைமை செயற்குழு உறுப்பினர் என்ற பதவியுடன் இருந்த சசிகலா நீக்கப்பட்டார். 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் அவர் மன்னிப்பு கேட்டு மீண்டும் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களாவுக்குள் நுழைந்தார்.
அடிப்படை உறுப்பினரா?
ஆனால் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக சேர்க்கப்பட்டாரா? மீண்டும் தலைமை செயற்குழு உறுப்பினராக சசிகலா நியமிக்கப்பட்டாரா? என்பது யாருக்கும் தெரியாத ஒன்று. தலைமை செயற்குழு உறுப்பினர்கள் என ஜெயலலிதா கடைசியாக அறிவித்த பட்டியலில் சசிகலா பெயர் இடம்பெறவே இல்லை. இதைத்தான் சசிகலா புஷ்பா தரப்பு தங்களுக்கான சாதக அம்சங்களில் ஒன்றாகப் பார்க்கிறது.
விரும்பாத டெல்லி
இந்த நிலையில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேரடியாக சென்று சசிகலாவுடன் ஆலோசனை நடத்துவதை டெல்லி மத்திய அரசு வெளிப்படையாகவே விரும்பவில்லை எனக் கூறிவிட்டது. இதனால்தான் டெல்லியில் இருந்து திரும்பிய பன்னீர்செல்வம் போயஸ் கார்டன் பக்கமே எட்டிப்பார்க்காமல் இருந்தார். இதை அதிமுகவினரே ஆச்சரியத்துடன் பார்த்து வந்தனர்.
திடீர் சந்திப்பு
இதனிடையே திடீரென நேற்று ஓ. பன்னீர்செல்வம் போயஸ் கார்டன் சென்று சசிகலாவை சந்தித்தது பஞ்சாயத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுக்குழு குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.
அதெப்படி சந்திக்கலாம்?
அதிமுகவில் உறுப்பினரா? இல்லையா? அவரால் அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க முடியுமா? என்ற கேள்விகளுக்கே பதில்தராத ஒரு தனிநபரை முதல்வர் பன்னீர்செல்வம் சந்திப்பது மரபுகளுக்கு எதிரானது; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறுவதாகும் என்பதுதான் புதிய பஞ்சாயத்து. இதற்கும் ஒரு வழக்கு போடுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது சசிகலா எதிரணி என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.