குடிசை, ஆட்டோவிற்கு தீவைத்த போலீஸ்… அது மார்பிங் வீடியோவாம்.. டிஜிபி டி.கே. ராஜேந்திரன்
குடிசை, ஆட்டோவிற்கு போலீசாரே தீ வைத்த சம்பவம் மார்பிங் செய்யப்பட்டது என்று டிஜிபி டி.கே. ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த கோரி சென்னை மெரினா கடற்கரையில் 7 நாட்களாக மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய போராட்டம் வன்முறை களமாக மாறியது.
மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தி அமர்ந்திருந்தவர்கள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டனர். மெரினாவிற்கு வரும் அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டு சென்னை முழுவதும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.

இதனிடையே மர்ம நபர்கள் சிலர் திருவல்லிக்கேணியில் உள்ள ஐஸ்ஹவுஸ் காவல்நிலையத்திற்கு தீ வைத்தனர். சென்னை மயிலாப்பூரிலும் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டன. மயிலாப்பூர் டி.வி. கோயில் தெருவில் உள்ள போலீஸ் வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டது. இதுதவிர, காவல்துறை பேருந்து, வேன் ஆகியவற்றை தீயில் எரிந்து சாம்பலாகின. பல மாநகர பேருந்துகள் சேதமடைந்தன. இதனால் சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட பகுதிகள் போர்க்களமாக காட்சி அளித்தன.
இதேபோன்று, மெரினா கடற்கரை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை காவல்துறையினர் தடியால் அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும், ஆட்டோக்களுக்கும், குடிசைக்குள் போலீசாரே தீ வைக்கும் சம்பவங்களும் நடந்துள்ளன. போலீசாரே வாகனங்களுக்கு தீ வைத்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதனிடையே சென்னை கலவரம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை ஆணையர் ஜார்ஜ், மாணவர்கள் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதாலேயே கல்வீச்சு, கலவரம் நடைபெற்றதாக கூறினார். மேலும், வாகனங்களுக்கு போலீசார் தீ வைத்ததாக வெளியான வீடியோ குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் கூறினார். மேலும், இந்த வீடியோக்கள் மார்பிங் செய்யப்பட்டதாக இருக்கலாம் என்றும் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இதே போன்ற கருத்தை டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரனும் தெரிவித்துள்ளார். போலீசார் வாகனங்களுக்கு தீ வைத்துள்ள காட்சிகள் மார்பிங் செய்யப்பட்டது என்று அவர் கூறியுள்ளார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications