ஊட்டி சாக்லேட்டில் இரும்புக் கம்பி...!
நீலகிரி: ஊட்டியில் குழந்தைகளுக்கான சாக்லெட்டில் இரும்புக் கம்பி இருந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகள் விரும்பி உண்ணும் நூடுல்ஸ் உணவுப் பொருளில் காரீயம் அதிகமாக இருப்பதாக வந்த புகாரை அடுத்து இந்தியா முழுவதும் நூடுல்சுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஆங்காங்கே அப்பளத்தில் புழுக்கள், குழந்தைகள் உண்ணும் பால்பவுடரில் புழுக்கள் என்று புகார்கள் வரத்தொடங்கின.

இந்நிலையில் ஊட்டியில் குழந்தைகள் சாப்பிடும் மிட்டாய் மீதும் புகார் வந்து உள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள பலசரக்கு கடைக்கு பள்ளி மாணவர் சைலோ தனது நண்பர்களுடன் சென்றார்.
அங்கு சைலோ தனது நண்பர்களுக்காக 3 மிட்டாய்களை காசு கொடுத்து வாங்கினார். அதில் ஒரு மிட்டாயை பிரித்து பார்த்த போது அதில் இரும்பு கம்பி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். கையில் இருந்த மற்ற மிட்டாய்களையும் பிரித்து பார்த்த போது அதிலும் இரும்பு கம்பிகள் இருந்தன. இதுகுறித்து சைலோ தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து நகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ரவியிடம் புகார் அளிக்கப்பட்டது. இன்று அதிகாரி விசாரணை நடத்த உள்ளார்.
இதுகுறித்து பொதுமக்கள், "குழந்தைகள் சாப்பிடும் மிட்டாயில் இரும்பு கம்பி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மாணவர் சைலோ வயது கொஞ்சம் அதிகமாக இருப்பதால் இதை கண்டுபிடித்து விட்டார். இதையே சிறு குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து கவனிக்காமல் விட்டு இருந்தால் பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருக்கும். தவறு எங்கு நடந்தது என்பதை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications