சொகுசு ரிசார்ட்டில் இருந்து எம்எல்ஏக்களை வெளியேற்றவில்லை.. ஐஜி மறுப்பு
கூவத்தூரில் உள்ள சொகுசு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்கள் யாரையும் போலீசார் வெளியேற்றவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னை: ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பார் என்று எதிர்ப்பார்த்து அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கூவத்தூர் சென்று எம்எல்ஏக்களுடன் தங்கி இருந்தார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து அவர் சென்னை திரும்பி இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.
இதனிடையே, இன்று காலை கூவத்தூரில் இருக்கும் அனைத்து எம்எல்ஏக்களும் வெளியேற வேண்டும் என்று போலீசார் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, தாங்கள் அனைவரும் சுதந்திரமாக இருப்பதாகவும், வசதியுடன் இருப்பதாகவும் ஆண் எம்எல்ஏக்களும் பெண் எம்எல்ஏக்களும் தனித்தனியாக பேட்டி அளித்தார்கள்.
இந்நிலையில், கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்து எம்எல்ஏக்களை வெளியேற்றவில்லை என்று ஐஜி தாமரைக்கண்ணன் கூறியுள்ளார். எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவே போலீசார் கூடி இருப்பதாகவும் அவர்களை வெளியேற்ற கூடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், இங்குள்ள அனைத்து எம்எல்ஏக்களிடமும் விசாரணை நடத்தி அவர்கள் சொல்வதை பதிவு செய்துக் கொண்டிருக்கிறோம் என்ற ஐஜி தாமரைக் கண்ணன், எம்எல்ஏக்களுக்கு எதிராக போலீசார் செயல்படுவதாக எழுந்துள்ள குற்றசாட்டில் உண்மையில்லை என்று மறுப்பு தெரிவித்தார்.