சென்னை: நகைக்காக அழகு நிலைய பெண்ணை கொலை செய்த தம்பதியர் கைது
செங்குன்றம் அடுத்த பவானி நகரை சேர்ந்தவர் கணேஷ் (எ) ஜெய கணேஷ் (36). இவரது மனைவி மாலினி (32). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். புழல் சிறை அருகே காந்தி தெருவில் பெண்கள் அழகு நிலையம் நடத்தி வந்தார் மாலினி. கடந்த 14ம் தேதி அழகு நிலையத்தில் தனியாக இருந்த மாலினி கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் மாலினியின் செல்போனை கைப்பற்றி அதில் யார், யார் தொடர்பு கொண்டுள்ளனர் என விசாரித்தனர்.
இதில் கடைசியாக பேசியது சேலத்தில் வசிக்கும் அவரது தோழி மல்லிகா என்பது தெரியவந்தது. இதையடுத்து கொலையில் துரிதமாக துப்பு துலங்கியது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
பெரியபாளையம் அருகே திருத்தண்டலத்தை சேர்ந்தவர் மல்லிகா (22). இவர் அடிக்கடி மாலினியின் பியூட்டி பார்லருக்கு வந்து சென்றுள்ளார். இதில் இருவரும் நெருங்கிய தோழிகளானார்கள். கடந்த 3 வருடங்களாக இந்த நட்பு நீடித்துள்ளது.
இந்நிலையில் சேலம் இரும்பு உருக்காலை எம்.ஜி.ஆர். நகர் மாரமங்கத்தூர் பட்டியை சேர்ந்த எலக்ட்ரீசியன் வெங்கடேசனுக்கும் மல்லிகாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் 3 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துள்ளனர். அதன்பின் சேலம் சென்று வசித்துள்ளார் மல்லிகா.
வெங்கடேசன் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டன் கடையும் நடத்தியுள்ளார். விவசாயமும் செய்துள்ளார். இதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் பணம் தேவைப்படவே யாரிடமாவது கடனாக வாங்கி கொடுக்கும்படி மனைவியிடம் கூறியுள்ளார். உடனே மல்லிகா புழலில் இருக்கும் தோழி மாலினியை பற்றி தெரிவித்து அவரிடம் பணம் வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
அதன்படி, மாலினியிடம் கடைசியாக செல்போனில் தொடர்பு கொண்டு பேசி தாங்கள் வருவதை தெரிவித்துள்ளார். இருவரும் மாலினியின் அழகு நிலையத்துக்கு சம்பவத்தன்று வந்துள்ளனர். அவரிடம் கணவனின் நிலையை கூறி கடன் கேட்டபோது கொடுக்க மறுத்துள்ளார்.அங்கு இருந்த டிவிகளில் ஒன்றை தரும்படியும் அதை விற்று பணம் பெறுவதாகவும் மல்லிகா கூறியுள்ளார். அதையும் மாலினி ஏற்கவில்லை.
இதில் தகராறு ஏற்படவே மாலினி அணிந்திருந்த நகைக்கு ஆசைப்பட்டு மாலினியின் கழுத்தை அறுத்து தம்பதியினர் கொலை செய்தனர். பின்னர் செயின், கம்மல், தாலி சரடு உள்ளிட்ட 7 சவரன் நகை களை எடுத்துக்கொண்டு தப்பியுள்ளனர்.
இவ்வாறு போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.மல்லிகா தற்போது கர்ப்பமாக உள்ளார். இதையடுத்து சேலம் சென்று அவரையும், கணவன் வெங்கடேசனையும் போலீசார் கைது செய்து புழல் காவல் நிலையம் அழைத்து வந்தனர். இவர்களுக்கு வேறு யாரும் உடந்தையாக இருந்தார்களா என தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.