3 வயது மகனை நெஞ்சில் மிதித்துக் கொன்று தம்பதிக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி: தூத்துக்குடியில் 3வயது மகனை கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த தம்பதியினரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரை அடுத்துள்ள நடுவக்குறிச்சியை சேர்ந்தவர் திருப்பதி. இவருடைய மகள் சரிதா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜன் என்பவருக்கும் கடந்த சிலஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இத்தம்பதியினருக்கு 3 வயதில் பாரதிதாசன் என்ற லிவிங்ஸ்டன் என்ற மகன் இருந்தான்.
குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜனும், சரிதாவும் திருமண வாழ்வில் இருந்து பிரிந்து விட்டனர். குழந்தையை சரிதா தன் பராமரிப்பில் வளர்த்து வந்தார். சரிதா குழந்தையுடன் தனது தந்தை வீட்டில் வாழ்ந்து வந்தார்.
சரிதாவிற்கு அவரது பெற்றோர் இரண்டாவதாக திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதனையடுத்து ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த கருப்பசாமியின் மகன் உத்திரசெல்வத்திற்கும், சரிதாவிற்கும் திருமணம் செய்யப்பட்டது. உத்திரசெல்வத்திற்கு ஏற்கனவே திருமணமான நிலையில் அவரது மனைவி இறந்து விட்டார்.
திருமணத்திற்கு பின்பு தனது மகனை பராமரிப்பதில் சரிதாவிற்கு சிக்கல் ஏற்பட்டது. மகனால் குடும்ப வாழ்வில் நிம்மதியாக ஈடுபடவில்லை, இல்லற வாழ்விற்கும் தனது மகன் இடையூறாக இருப்பதாகவும் கருதினார்.
இதனையடுத்து கடந்த 28-03-2013 அன்று உத்திரசெல்வம் தனது மனைவி, குழந்தை பாரதிதாசனுடன் அருகிலுள்ள தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். செல்லும் வழியில் பாரதிதாசன் தவறி விழுந்து இறந்துவிட்டான் என்று கூறி கணவன், மனைவி இருவரும் பாரதிதாசன் உடலை அடக்கம் செய்ய முயன்றனர்.
இதுதொடர்பான தகவல் அறிந்த புதியம்புத்தூர் போலீசார் விரைந்து வந்து இறந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் முடிவில், சிறுவன் பாரதிதாசன் விஷம் கொடுத்தும், நெஞ்சில் காலால் மிதிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து புதியம்புத்தூர் போலீசார் கணவன், மனைவி இருவரையும் சிறுவனை கொன்ற வழக்கில் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு தூத்தக்குடி 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் விசாரணை எல்லாம் முடிந்து, தீர்ப்பு கூற இருந்தநிலையில், சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த கணவன்- மனைவி இருவரும் தலைமறைவாகி விட்டனர்.
தலைமறைவான கணவன், மனைவி இருவரையும் கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் மூலமாக போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி., நாராயணன் தலைமையிலான போலீசார் தலைமறைவாகி எர்ணாகுளத்தில் வாழ்ந்து வந்த உத்திரசெல்வம், சரிதா இருவரையும் கைது செய்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வழக்கின் விசாரணை எல்லாம் ஏற்கனவே முடிந்த நிலையில் நீதிபதி பால்துரை பெற்ற மகனையே விஷம் கொடுத்தும், மிதித்தும் கொன்று தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய சரிதா, அவரது கணவன் உத்திரசெல்வத்திற்கு ஆயுள்தண்டனையும், தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
தலைமறைவாக இருந்த கணவன் -மனைவி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் உடனடியாக அவர்களது வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.












Click it and Unblock the Notifications