சங்கராச்சாரியார் மீதான சங்கரராமன் கொலை வழக்கில் 12-ந் தேதி தீர்ப்பு தேதி அறிவிப்பு
சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட 24 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்துவிட்டாலும் தீர்ப்பு வழங்கப்படவில்லை.
இந் நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயேந்திரர், விஜயேந்திரர், சுந்தரேச அய்யர் உள்பட 15 பேர் ஆஜராகி இருந்தனர். அப்பு, ரஜினிகாந்த், ஆர்.டி.பழனி உள்பட 8 பேர் ஆஜராவில்லை.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த கதிரவன் இறந்துவிட்டார். இதைத் தொடர்ந்து வழக்கில் தீர்ப்பு வழங்க ஆட்சேபணை எதுவும் தெரிவிக்க விரும்புகிறீர்களா என்று சங்கரராமன் மகன் ஆனந்த் சர்மாவிடம் நீதிபதி கேள்வி கேட்டார்.
இதற்கு பதில் அளித்த ஆனந்த் சர்மா, வழக்கில் தீர்ப்பு வழங்க ஆட்சேபணம் இல்லை என்றார். இதையடுத்து, வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியது. விசாரணை முடிவடைந்த நிலையில் வரும் 12ந் தேதி தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி முருகன் அறிவித்ததோடு அன்றைய நாளில் குற்றம்சாற்றப்பட்டுள்ள 23 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.