சாரல் மழை... குளுகுளு காற்று - ஜில்லென தொடங்கியது குற்றால சீசன்
மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று குற்றாலத்தில் சீசன் களை கட்ட தொடங்கி உள்ளது.
சென்னை: சிலு சிலு சாரல் மழை, குளுகுளு காற்றுடன் குற்றாலத்தில் சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது. விடுமுறை நாட்கள் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
குற்றாலத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரை சீசன் காலமாகும். தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் மழையால் அருவிகளில் தண்ணீர் ஆர்பரிக்கும்.
இதமான சாரல்... குளு குளு காற்றை அனுபவிக்க ஏராளமானோர் குற்றாலத்திற்கு படையெடுத்து வருவார்கள். இந்த ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி முதலே குற்றால சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது.
களைகட்டும் குற்றால சீசன்
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று குற்றாலத்தில் சீசன் களை கட்ட தொடங்கி உள்ளது. மழை வலுப்பெற்று உள்ளதால் குற்றாலம், ஐந்தருவி,உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
அருவிகளில் வெள்ளம்
மழை தீவிரமடைந்துள்ளதால் இரவு முதல் ஐந்தருவி, குற்றாலம் மெயின் அருவிகளில் வெள்ளம் ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர் ஐந்தருவியில் வெள்ளம் குறைந்தது. அங்கு மட்டும் சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
பிரதான அருவி
இன்று அதிகாலை 5மணி முதல் குற்றாலம் மெயின் அர்வியில் தண்ணீர் வரத்து குறைந்ததைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகளை குளிக்க காவல்துறையினர் அனுமதி அளித்ததால் உற்சாக குளியல் போட்டனர்.
பயணிகள் வருகை
குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் என பெரும்பாலான அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது.
காலை முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அருவி களுக்கு திரண்டு வந்து உற்சாகத்தோடு குளித்து சென்ற வண்ண ம் உள்ளனர்.
களை கட்டிய சீசன்
இன்றும், நாளையும் விடுமுறை நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். சீசன் களை கட்ட தொடங்கியுள்ளதையடுத்து அங்கு வியாபாரமும் சூடு பிடித்துள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.