கழிவறை வாயிலில் பொதுமக்கள் படத்தை ஒட்டி கேவலப்படுத்திய கோவை மாநகராட்சி
கோவை: பெண்ணின் குடும்ப புகைப்படத்தை மாநகராட்சி கழிவறைகளில் ஒட்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் சம்பந்தப்பட்ட பெண் மனுகொடுத்துள்ளார்.
கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. கோவை ஆர்.எஸ்.புரம் அருகே உள்ள காமராசபுரத்தில் வசிக்கும் சாந்தி என்பவர் தனது குழந்தைகளுடன் வந்து ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், "கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பகுதிக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் கணக்கெடுப்பு என்றுகூறி எங்களையும், அங்கு வசிக்கும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்களின் குழந்தைகளை ஒன்றாக நிற்க வைத்து குரூப் போட்டோ எடுத்தனர்.தற்போது அந்த போட்டோ தமிழகம் முழுவதும் 'நம்ம டாய்லெட்'டுகளில் ஒட்டப்பட்டுள்ளது.
இது எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் உள்ள குழந்தைகள் பள்ளி சென்றால் உடன் படிக்கும் மாணவர்கள் கிண்டல் செய்கிறார்கள் என்று கூறுகின்றனர். படத்தில் உள்ள சண்முகப்பிரியா என்ற பெண் கணவரை பிரிந்து வாழும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். குடும்பத்திலும் பிரச்னை ஏற்படுகிறது.
ஆகவே எங்கள் குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி தமிழகம் முழுவதும் 'நம்ம டாஸ்லெட்'டுகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அனைத்தையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
இதற்கு காரணமான அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.
மனு கொடுத்த பின்னர் சாந்தி உள்ளிட்ட சிலர் கோவை ரேஸ்கோர்ஸ், வ.உ.சி பார்க் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று அங்குள்ள நம்ம டாய்லட்டுகளில் ஒட்டப்பட்டிருந்த தங்கள் படங்களை கிழித்து எறிந்தனர்.
பொதுமக்களின் நலனுக்கான நலத்திட்டத்திற்கு எடுத்த புகைப்படங்களை அரசு அதிகாரிகள் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் கோவையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications