ஜல்லிக்கட்டு விவகாரம்.. சு. சுவாமியின் துடுக்குப் பேச்சுக்கு முத்தரசன் கடும் கண்டனம்
தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் தமிழக அரசை கலைக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமியின் பேச்சுக்கு முத்தரசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக காட்டிக் கொள்ளும் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் தமிழகத்தில் குடியரசு ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கூறியதற்கு சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் முத்தரசன் கூறியதாவது:
தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இது கண்டனத்திற்குரியது. இதுபோன்ற பேச்சுக்களை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும், இந்த பொங்கலுக்கு ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்றும் முத்தரசன் வலியுறுத்தினார். தொடர்ந்து நடைபெறும் விவசாயிகள் தற்கொலையை தடுக்கவும், விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டு தடையை மீறி நடத்தப்பட்டால் சிபிஐ அதனை ஆதரிக்கும் என்றும் முத்தரசன் உறுதியளித்தார்.