பேசிக் கொண்டிருந்த போதே மேடையில் மயங்கி விழுந்த டி.ராஜா... மருத்துவமனையில் அனுமதி
சென்னை: சென்னையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா திடீரென மயங்கி விழுந்தார். அதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு கூட்டம் தியாகராயநகர் முருகன் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற தேசிய செயலாளர் டி.ராஜா, மேடையில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார்.
இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் நிர்வாகிகள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறுகையில், "கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது, டி.ராஜா மயங்கி விழுந்தார். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் இருந்ததால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தற்போது பூரண குணநலத்துடன் அவர் உள்ளார். திங்கள்கிழமை (இன்று) அவர் வீடு திரும்புவார்" என்றார்.