தமிழகத்தின் அனைத்து துறையிலும் ஊழல்: மக்களை சந்திக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
சென்னை: தமிழகத்தில், அனைத்து துறைகளிலும், ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. இப்பிரச்னைகளை முன்னிறுத்தி, ஏப்ரல் மாதம் முதல், மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தை, இந்திய அரசு பயன்படுத்தி, ஈழத் தமிழர்களுக்கு, சம அந்தஸ்து பெற்றுத் தரவும், நிரந்த தீர்வு கிடைக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
சென்னையில் அக்கட்சியின் 21 ஆவது மாநில மாநாடு கடந்த 16 ஆம் தேதி தொடங்கி நான்கு நாட்கள் நடைபெற்றது. கட்சியின், அகில இந்திய தலைவர்கள், பிரகாஷ் கராத், சீத்தாராம் யெச்சூரி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானங்கள்:
மத்தியில் ஆட்சி மாறினாலும், தாராளமய பொருளாதாரக் கொள்கையை தீவிரமாகச் செயல்படுத்துகின்றனர். மானியங்கள் வெட்டு, நிலம் கையப்படுத்த புதிய சட்டம், ஏற்கனவே அளித்து வந்த சலுகைகள் ரத்து ஆகியன தொடர்கிறது.
கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல், வரி விதித்து விலையை உயர்த்துகின்றனர்.
பாஜக அரசின் போக்கால், இந்து அமைப்புகள், மத மோதல்களைத் துாண்டி விடும் நிலைக்கு வந்துள்ளன.
தமிழகத்தில், அனைத்து துறைகளிலும், ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. இப்பிரச்னைகளை முன்னிறுத்தி, ஏப்ரல் மாதம் முதல், மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தப்படும்.
ஈழத்தமிழர்களுக்கு
இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தை, இந்திய அரசு பயன்படுத்தி, ஈழத் தமிழர்களுக்கு, சம அந்தஸ்து பெற்றுத் தரவும், நிரந்த தீர்வு கிடைக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழிற்சங்கங்கள்
இந்தியாவில் உருவாகியுள்ள புதிய தலைமுறை மற்றும் இளைஞர்களின் வேலை வாய்ப்பை பாதுகாக்கவும், ஆட்குறைப்பைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த சமூகப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில், அரசுகள் உறுதியுடன் நிற்பதும், அதற்காக தொழிற்சங்கள் மற்றும் சமூக இயக்கங்கள் கூட்டாகச் செயல்படுவதும் தேவை.
பெண்கள் மீதான வன்முறை
குழந்தைகள் மீதான வன்முறைகளை விசாரித்திட குழந்தைகள் நீதிமன்றங்களும், பெண்கள் மீதான வன்முறைகளை விசாரித்திட மகளிர் சிறப்பு நீதிமன்றங்களும் மாவட்டங்கள் தோறும் ஏற்படுத்தப்படவும், இவ்வழக்குகள் அனைத்தும் ஆறு மாத காலத்திற்குள் நடத்தி முடிக்கப்படவும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமிலவீச்சு
அதிகரிக்கும் அமில வீச்சை தடுத்து நிறுத்த தமிழக அரசு அமில விற்பனையை முறைப்படுத்திட வேண்டும். உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் அமில வீச்சால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உயர் சிகிச்சை மற்றும் மறுவாழ்விற்கான முழு பொறுப்பையும் அரசே ஏற்க வேண்டும்.
உயர்மட்ட ஊழல்கள்
மாநிலங்களில் உயர்மட்ட ஊழல்களைத் தடுக்க லோகாயுக்தா அமைப்புகளை ஏற்படுத்துவது; முதல்வர் உட்பட இதன் வரம்புக்குள் கொண்டு வரவேண்டும்.
குடிமக்கள் சாசனம்
அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் ஊழல்களைத் தடுக்க குடிமக்கள் சாசனம் என்ற பெயரில் அனைத்து அரசு துறைகளும் மக்களிடமிருந்து வரும் விண்ணப்பங்களைப் பரிசீலித்து முடிவெடுப்பதற்கான காலத்தை நிர்ணயித்து, வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதை சட்டரீதியாக்கவேண்டும்.
பணபலம்
ஊழல் தடுப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்களைக் கொண்டு வரவேண்டும். தேர்தலில் பண பலத்தின் ஆதிக்கத்தைத் தடுக்க தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டு வரவேண்டும்.
வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப்பணத்தைக் கைப்பற்றுவதுடன், பதுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஊ.வே.சா இல்லம்
தமிழ் அறிஞர் உ.வே.சா., சென்னையில் வாழ்ந்த இல்லத்தை, அவரின் நினைவிடமாக, தமிழக அரசு மாற்ற வேண்டும்
தனியாருக்கு விற்பனை
இயற்கை வளங்களை அபரிமிதமான லாபம் பெறும் வகையில் தனியாருக்கு விற்பனை செய்வதைத் தடை செய்வது, என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பொதுக்கூட்டம்
மாநாட்டை முன்னிட்டு, கடற்கரை சாலையிலிருந்து, பொதுக்கூட்டம் நடைபெற்ற, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்துக்கு, கம்யூனிஸ்ட் தொண்டர்கள் பேரணியாக வந்தனர். மாநாட்டில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் மற்றும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கும் பொதுக்கூட்டம், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடந்தது. இதில், கட்சியின் மூத்த தலைவர்கள் பேசினர்.