ஜெ.- அருண் ஜேட்லி சந்திப்பு: மார்க்சிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு!!
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்று ஜாமீனில் இருக்கும் அண்ணா தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதாவை மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி சந்தித்தது தவறானது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயற்குழு விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயற்குழு இன்று வெளியிட்ட அறிக்கை:
மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்திருப்பது நியாயமான சந்தேகத்தை உருவாக்கியிருக்கிறது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதா நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், இப்படி ஒரு வழக்கில் தண்டிக்கப்பட்ட எவரும் இத்தனை விரைவாக ஜாமீன் பெற்றதில்லை என்கிற வெளிச்சத்திலும், அருண்ஜேட்லியை சந்தித்த பிறகு வருமான வரி வழக்கில் வரியை கட்டிவிட்டு தண்டனையின்றி வெளிவர முடிந்திருக்கிறது என்பதும் பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் ஜெயலலிதாவிற்காக உச்சநீதிமன்றத்தில் வாதாடியவர் என்பதை கணக்கில் கொண்டு பார்க்கிறபோது வெளித் தெரியாதா உடன்பாட்டிற்காகவே அருண்ஜேட்லி, ஜெயலலிதாவைச் சந்தித்திருக்கிறார் என்று பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சந்தேகத்தை தவறென்று கூற முடியாது.
தங்கள் அரசியல் லாபங்களுக்கான பரஸ்பர உதவிக்கான சந்திப்பே இது என்பதும் அதற்காக சட்டமும் நீதிமுறைகளையும் வளைக்கப்படலாம் என்பதும் மக்களின் நலனைப் பாதிக்கக் கூடியவை. அருண் ஜேட்லி இதுகுறித்து மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.
இத்தகைய தவறான உள்நோக்கம் கொண்ட சந்திப்பு ஏற்கத் தக்கதல்ல என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.