சிவகாசி: பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து 2 வீடுகள் தரைமட்டம் – மூதாட்டி பலி
சிவகாசி: சிவகாசியில் வீட்டிற்குள் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து இரண்டு வீடுகள் தரைமட்டமானது. வெடிவிபத்தில் மூதாட்டி ஒருவர் பலியானார். காயமடைந்த பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிவகாசி முனிஸ்வரன் காலனியை சேர்ந்தவர் முருகன்(வயது40). இவருக்கு சங்கரேஸ்வரி(32) என்ற மனைவியும், பள்ளியில் படிக்கும் ஒரு மகனும் இருக்கிறார். முருகன் தனக்கு சொந்தமான ஒரு வீட்டில் அனுமதி இல்லாமல் பட்டாசுகள் தயாரித்து பெட்டிகளில் அடுக்கி வைத்திருந்தார்.
இன்று காலையில் அந்த பட்டாசுகள் திடீரென்று தீப்பிடித்து வெடித்து சிதறியது. பட்டாசுகள் வெடித்ததால் அந்த பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமானது.
பட்டாசுகள் வெடித்து தீப்பிடித்ததில் முருகனின் மற்றொரு வீட்டிலும் தீப்பிடித்து அந்த வீட்டில் இருந்த சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்தது. இதில் முருகனின் 2 வீடுகளும் இடிந்து தரைமட்டமானது.
மேலும் அருகில் உள்ள 4 வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. வீடுகள் இடிந்ததால் அந்த பகுதி மக்கள் அலறியடித்து ஓடினர்.
பட்டாசுகள் வெடித்து வீடுகள் இடிந்து தரை மட்டமான தகவல் சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள் தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் சங்கரேஸ்வரியின் உடல் கருகி கிடந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில சேர்த்தனர். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. பட்டாசுகள் வெடித்ததும் அங்கு இருந்த முருகன் தப்பி ஓடி விட்டார்.
மேலும், பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த முருகனின் தாயார் முனியம்மாள் மற்றும் மகன் சரவணகுமார் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இதில், மூதாட்டி முனியம்மாள் இடிபாடுகளில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் முகமது ரபிக் கான் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.