சென்னையில் பட்டாசு புகைமூட்டம்.. மூச்சு திணறல், அலர்ஜியால் மக்கள் பாதிப்பு
சென்னை: தீபாவளி பட்டாசுகளால் ஏற்பட்ட மாசு காரணமாக சென்னை நகரில் பல மக்கள் மூச்சுத்திணறல், அலர்ஜியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாண்டு தீபாவளி பெரிய அளவில் தீ விபத்துகள் இல்லாமல் கடந்து சென்றுள்ளபோதிலும், புகை பெரும் பாதிப்புகளை விட்டுச் சென்றுள்ளது. சென்னையில் 5 பகுதிகளில் மாசுகட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் வழக்கத்தைவிட சுமார் 10 மடங்கு அதிகமாக காற்று மாசடைந்தது தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் புகைமூட்டத்தால் வாகன ஓட்டிகள் வாகனத்தை ஓட்டவே சிரமப்பட்டனர். முகப்பு விளக்குகளை எரியவிட்டுச் சென்றனர்.

சவுகார்பேட்டை
சவுகார்பேட்டையில் 777 மைக்ரோகிராம் என்ற அளவுக்கு காற்றில் மாசு கலந்திருந்தது. இதுதான் சென்னையின் அதிகபட்ச மாசடைந்த பகுதியாகும். இரவு 9 மணியளவில் கத்தீட்ரல் சாலை பகுதியில் சென்றவர்களால் சாலையையே பார்க்க முடியாத அளவுக்கு புகை மூட்டம் இருந்துள்ளது.

அலர்ஜி பாதிப்பு
திருவல்லிக்கேணியில் காற்று மாசு 12 மடங்கு அதிகரித்துள்ளது. தி.நகரை சேர்ந்த ஒரு பெண்மணி கூறுகையில், எங்கள் வீடு முழுக்க புகை மூட்டமாகிவிட்டது. என்னால் சற்று தூரத்தில் இருப்பவர்களை பார்க்கவே முடியவில்லை. அலர்ஜி பிரச்சினை உள்ளவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது என்றார்.

மூச்சு திணறல்
ஆஸ்துமா, நுரையீரல் பிரச்சினை உள்ளவர்கள், சுவாச பிரச்சினை உள்ளவர்களுக்கு இந்த தீபாவளி பெரும் சிரமங்களை கொடுத்துள்ளது. இருமல், தும்மல் என அவர்கள் படாதபாடு பட்டுள்ளனர், இந்த புகை மூட்டத்தினால்.

தீ குறைவு, புகை அதிகம்
அதே நேரம், கடந்த வருடத்தை ஒப்பிட்டால் தீ விபத்துகள் குறைவு. அண்ணாநகர் மற்றும் நொலம்பூர் பகுதிகளில் தார்ப்பாய் வேயப்பட்ட இரு கூரைகள் தீ பிடித்துள்ளன. ஊரப்பாக்கத்தில் ரசாயன ஆலையில் நடந்த விபத்தில் சட்டவிரோத குடோன் நடத்திவந்த அதன் உரிமையாளர் பலியானார். சென்னை மத்திய சென்னை மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராஜேஷ் கண்ணா கூறுகையில், செவ்வாய்க்கிழமை தீ விபத்து தொடர்பாக 7 அழைப்புகளும், புதன்கிழமை 46 அழைப்புகளும் வந்தன. 20 அழைப்புகள் வியாழக்கிழமை வந்தன என்றார். இது முந்தைய தீபாவளிகளை காட்டிலும் குறைவுதான்.












Click it and Unblock the Notifications