கடலூரில் பள்ளி மாணவியிடம் சில்மிஷம்: தலைமையாசிரியருக்கு ரத்தம் சொட்ட சொட்ட தர்ம அடி
கடலூர்: தனியார் பள்ளி மாணவியை ஆபாசமாக பேசியதோடு சில்மிஷம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில் அவரின் உறவினர்கள் சரமாரி தாக்கியதில் பள்ளி தலைமை ஆசிரியர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த கீழ்பட்டாம்பக்கத்தில் செயல்பட்டு வரும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் நெய்வேலியை சேர்ந்த இருதயராஜ் (32) தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அரசு பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது.
இவர் அப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை சரியாக படிக்கவில்லை என ஆபாசமாக பேசி கண்டித்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த மாணவியிடம் ஆபாசமாக பேசியதாகவும் அத்துமீறி சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதையடுத்து அந்த மாணவி தனது அண்ணன் ஷேக் மிஸ்வானிடம் முறையிட்டார். இதனால் ஆவேசம் அடைந்த ஷேக் மிஸ்வான் மற்றும் ஜமால் முகமது, ஹாஜாபாய் உள்பட உறவினர் 20 பேர் நேற்று மாலை பள்ளிக்கு திபுதிபுவென வந்து அங்கிருந்த தலைமைஆசிரியர் இருதயராஜிடம் மாணவியை எப்படி ஆபாசமாக பேசலாம் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தலைமை ஆசிரியரோ, நான் தவறு செய்யவில்லை, படிக்கவில்லையென்றால் மட்டுமே கண்டிப்பாக இருப்பேன் என கூறியுள்ளார். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத மாணவியின் உறவினர்கள், அப்பகுதி மக்கள் இருதயராஜை சரமாரி தாக்கினர். இதில் அவருக்கு முகம் மார்பு உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டியது.
பின்னர் பள்ளி முதல்வரின் சட்டையை கிழித்து அவரை தரதரவென இழுத்து சென்று நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காயமடைந்த இருதயராஜை போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பனியன் மற்றும் ஜட்டி மட்டுமே அணிந்த நிலையில் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் ரத்த காயங்களுடன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் நெல்லிக்குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.