குரூப்- 2 விடைகள் வெளியான விவகாரம் – மறுதேர்வு கோரி கடலூரில் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்
கடலூர்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 தேர்வின் விடைகள் முன்னாதாகவே வெளியேறிய சம்பவத்தில் அத்தேர்வை ரத்து செய்யக் கோரி கடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
கடந்த 2012 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 2 தேர்வுக்கான வினாத்தாள் கடலூரில் தேர்வுக்கு முன்னதாகவே வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கடலூரைச் சேர்ந்த சிலரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் மீண்டும் கடந்த ஞாயிற்றுக்கிழமை, டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-2 "அ" தேர்வுக்கான விடைகள் அடங்கிய துண்டுச்சீட்டு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையம் அருகே கண்டெடுக்கப்பட்டது.
இதனால் அத்தேர்வுக்கான வினாத்தாளும் தேர்வுக்கு முன்னதாகவே வெளியாகி விட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக போலீஸ் விசாரணைக்கு கடலூர் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
குரூப்-2 தேர்வுக்கான வினாத்தாள் வெளியானதாக எழுந்துள்ள விவகாரம், போட்டித்தேர்வு எழுதிய இளைஞர்களிடையே கடும் விரக்தியை ஏற்படுத்தி உள்ளது. இத்தேர்வை எழுதிய இளைஞர்கள் நேற்று கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இத்தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
தேர்வின்போதே இவ்வளவு குளறுபடிகள் என்றால், அறிவிக்கப்படும் முடிவெல்லாம் உண்மையான வெற்றியாளர்களைத்தான் கொண்டுள்ளதா, இல்லை பணத்திற்கு விலை போய்தான் வெளியிடப்படுகின்றதா என்று ஆத்திரத்தை வெளிக்காட்டியுள்ளனர் போட்டித்தேர்வில் பங்கேற்ற இளைஞர்கள்.