எங்க ஊருக்கு எதுவுமே செய்யல! இப்ப எதுக்கு வர்றீங்க? கம்பம் ராமகிருஷ்ணனை முற்றுகையிட்ட இளைஞர்கள்!
தேனி: தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், கம்பம் சட்டமன்ற உறுப்பினருமான கம்பம் ராமகிருஷ்ணனை இளைஞர்கள் சிலர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருமண மண்டபத்தை விட்டு கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வை வெளியேறவிடாமல் தடுத்து நிறுத்தியதால் அவரது ஆதரவாளர்களுக்கும் எரசக்கநாயக்கனூர் இளைஞர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் சின்னமனூர் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள எரசக்கநாயக்கனூர் கிராமத்தில் இன்று கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை துவக்கி வைக்க வந்த கம்பம் சட்டமன்ற உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வை கிராமமக்கள் மற்றும் இளைஞர்கள் சிலர் சுற்றி வளைத்து நின்று கொண்டு கேள்விக்கணைகளை வீசினர்.

சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து எங்கள் ஊருக்கு எந்த நிதியும் இதுவரை நீங்கள் ஒதுக்கீடு செய்யவில்லை என்றும் நிதி ஒதுக்கீடு செய்யாத நீங்கள் எங்கள் ஊருக்கு ஏன் வர வேண்டும் எனவும் ஆவேசமாக கேட்டனர். பலமுறை உங்கள் வீட்டிற்கு நேரில் வந்து மனு கொடுத்தும் எங்கள் ஊரை நீங்க கண்டு கொள்ளவில்லை என ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தனர்.
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, எரசக்கநாயக்கனூர் கிராமத்திற்கு தேவையான பணிகள் செய்து கொடுக்கப்படும் என்ற உறுதியை அளித்தார் கம்பம் ராமகிருஷ்ணன். இதனிடையே அதற்குள் எம்.எல்.ஏ. ஆதரவாளர்களுக்கும் இளைஞர்கள் சிலருக்கும் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு வரை சென்றது.
ஒரு கட்டத்தில் விவகாரம் வில்லங்கமாக மாறத் தொடங்கியதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டு இரு தரப்பினரையும் பிரித்து அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வு கட்சி மேலிடத்தின் கவனத்துக்கும் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications