தென்காசி மாவட்டத்தில் இன்று மாலை முதல் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு.. நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்!
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி காலை 10 மணி வரை தடை உத்தரவு என ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். இந்த ஊரடங்கு அறிவிப்பின் படி, 4 நபர்களுக்கு மேல் கூடி நின்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டம் நெற்கட்டும் செவல் கிராமத்தில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவன் நினைவு மண்டபத்தில், பூலித்தேவன் பிறந்த நாளினை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. பூலித்தேவன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்துவது வழக்கம்.

நாளை (செப்டம்பர் 1) பூலித்தேவனின் 309-வது பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், தென்காசி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் மற்றும் பிற மாவட்டத்தில் இருந்தும் பொதுமக்கள் மற்றும் சமுதாய அமைப்புகளை சார்ந்தவர்கள் வருகை தருவார்கள். இதனை முன்னிட்டு தென்காசி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பூலித்தேவரின் 309வது பிறந்தநாள் விழாவையொட்டி தென்காசியில் இன்று முதல் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணி முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி காலை 10 மணிவரை 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொது அமைதியை காக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நான்கு நபர்களுக்கு மேல் கூட்டமாகச் செல்லக் கூடாது. வாள், கத்தி, கற்கள் உள்ளிட்ட பொருட்களை வாகனங்களில் எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். பொதுமக்கள் அனைவரும் இந்த உத்தரவை கடைபிடித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலை, ரயில்வே பீட்டர் சாலை, சுரண்டை சாலை, தெற்குரத வீதி, ராஜபாளையம் சாலை, ரத்தினபுரி நவா சாலை, புளியங்குடி - பாம்புகோவில் சந்தை சாலை, டி.என்.புதுக்குடி, வாசுதேவநல்லூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு மதுபானக் கடைகள் செப்டம்பர் 1 ஆம் தேதி மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications