விமான இருக்கையில் மறைத்து 2 கிலோ தங்கம் கடத்தல் - சென்னையில் 2 பேர் கைது!
சென்னை: சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தின் இருக்கையில் மறைத்து கடத்தப்பட்ட 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக 2 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் சாமர்த்தியமாக இருக்கையில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தியுள்ளனர்.
அவர்கள் விமானம் வரை எப்படி தங்கக் கட்டிகளை கொண்டு வந்தனர் என்பது தெரியவில்லை.
தங்கக் கடத்தல் தகவல்:
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
தீவிர கண்காணிப்பு:
இதையடுத்து விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். நேற்று காலை சிங்கப்பூரில் இருந்து விமானம் வந்தது.
இருக்கையில் தங்கம்:
இதில் வந்த பயணிகள் இறங்கிச் சென்ற பின்னர் விமானத்தை சுத்தம் செய்ய ஊழியர்கள் ஏறினார்கள். அப்போது விமானத்தில் ஒரு இருக்கையின் கீழ் 4 தங்கக்கட்டிகள் இருப்பதை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி விமான நிறுவன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தந்தனர்.
சுங்க இலாகவிற்கு தகவல்:
பாதுகாப்பு அதிகாரிகள் இருக்கையில் தங்கம் இருப்பது குறித்து விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் தந்தனர். சிங்கப்பூரில் இருந்து வந்த அந்த விமானம் மீண்டும் காலை டெல்லிக்கு செல்லும் என்பதால் விமானத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்து கொண்டு இருந்தனர்.
மடக்கி பிடித்த அதிகாரிகள்:
விமானத்தில் ஏறிய ஒரு பயணி, தங்கம் இருந்த இருக்கைக்கு சென்று தங்கம் இருக்கிறதா என்பதை பார்த்து விட்டு, செல்போனில் பேசினார். இதனை கண்ட சுங்க இலாகா அதிகாரிகள் அவரை மடக்கிப் பிடித்தனர்.
இரண்டு பேர் கைது:
விசாரணையில் அவர் சென்னையைச் சேர்ந்த ரியாசுதீன் என தெரியவந்தது. சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் வந்தவர் டெல்லியைச் சேர்ந்த விகாஷ் அகர்வால் என்பதும் தெரியவந்தது. விமான நிலையத்தில் இருந்த அவரையும் சுங்க இலாகா அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்.
சுற்றுலா விசாவில் கடத்தல்:
அதிகாரிகள் நடத்திய விசாரணையில் விகாஷ்அகர்வால் சுற்றுலா விசாவில் சிங்கப்பூருக்கு சென்று தங்கத்தை கடத்தி கொண்டு வந்தது தெரிய வந்தது.
60 லட்ச ரூபாய் மதிப்பு:
2 கிலோ எடை கொண்ட தங்கத்தின் மதிப்பு கிட்டதட்ட ரூபாய் 60 லட்சம் ஆகும். இதையடுத்து சுங்க இலாகாவினர் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications