ஓகி புயல் : கன்னியாகுமரியில் இருந்து இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து #CycloneOckhi
ஓகி புயல் சூறையாடி வருவதால் குமரியில் இருந்து இயக்கப்படும் அனைத்து விரைவு ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Recommended Video

கன்னியாகுமரி: ஓகி புயல் கன்னியாகுமரிக்கு தெற்கே மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக குமரியில் காற்றோடு பலத்த மழை பெய்வதால் அனைத்து விரைவு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் இலங்கைக்கு அருகில் உருவான தாழ்வுப் பகுதியானது இன்று காலை மேலும் தீவிரமடைந்தது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, புயலாக உருவெடுத்துள்ளது.
குமரியில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ள இந்தப் புயலுக்கு ஓகி என பெயர் இடப்பட்டுள்ளது. இந்நிலையில் வியாழக் கிழமை அதிகாலை 2 மணி முதல், பலத்த சூறைக்காற்றுடன் குமரி மாவட்டம் முழுவதும் மழை பெய்யத் துவங்கியது.

வேறோடு சாய்ந்த மரங்கள்
பலத்த சத்தத்தோடு வீசிய சூறைக்காற்றால் வடசேரி, நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல், கன்னியாகுமரி, ஈத்தாமொழி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே மின்கம்பங்கள், சாலையோரம், வீட்டுப் பகுதிகளில் நின்ற மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.

மின்கம்பங்கள் சாய்ந்தன
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பரவலாக வீசிய சூறைக்காற்றினால் பல மின்கம்பங்கள் சரிந்து விழுந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

முடங்கிய மாவட்டம்
போதிய மின்சாரம் இன்றி பெரும்பாலான தனியார் தொலைத்தொடர்பு கோபுரங்கள் வேலை செய்யவில்லை. இதனால் இணையதளம், செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சேவைகளும் முடங்கின.

தண்டவாளங்களில் மரங்கள்
ரயில் தண்டவாளங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளன. மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. மின் கம்பிகள் சூறைக்காற்றுக்கு அறுந்து விழுந்துள்ளதால் ரயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அனைத்து ரயில்களும் ரத்து
இதனிடையே கன்னியாகுமரியில் இருந்து இயக்கப்படும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும், பயணிகள் ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கும், நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கும் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. 12க்கும் மேற்பட்ட பல ரயில்கள் ரதது செய்யப்பட்டுள்ளன.

ரயில்சேவையில் மாற்றம்
இதனிடையே திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட சில ரயில் சேவைகள் இயக்கப்படுவதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்சி - திருவனந்தபுரம் ரயில் நெல்லை - திருவனந்தபுரம் இடையே இயக்கப்படாது.












Click it and Unblock the Notifications