ஆடி அசைந்து வரும் 'ஹெலன்'... சென்னைக்கு 460 கி.மீ தொலைவில் நிற்கிறது!
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஹெலன் புயல் மிகவும் மெதுவாக நகர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு வட கிழக்கில் 460 கிலோமீட்டர் தொலைவில் அது நிலை கொண்டிருந்தது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டனத்திற்கு தெற்கு தென் கிழக்கே 250 கிலோமீட்டர் தொலைவில் அது நிற்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து தொடர்ந்து நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஹெலன் புயல் மேற்கு வட மேற்கில் தொடர்ந்து மெதுவாக நகரும் என்றும், பிந்னர் அது மேற்கு தென் மேற்காக நகர்ந்து, 22ம் தேதி பிற்பகல் வாக்கில் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும், மசிலிப்பட்டனத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
புயல் தாக்கம் காரணமாக, ஆந்திர மாநில கடலோரப் பகுதிகள் முழுவதிலும், 21ம் தேதி பிற்பகல் முதல் பல இடங்களில் கன மற்றும் மிக கன மழை பெய்யக் கூடும்.
வடக்கு தமிழகத்தில் 22ம் தேதி பெருவாரியான இடங்களில் பரவலாக கன மழை பெய்யக் கூடும்.
புயல் கரையைக் கடக்கும் சமயத்தில், வடக்கு தமிழகம், புதுச்சேரியில், மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசக் கூடும்.
21ம் தேதி பிற்பகலுக்கு மேல் வடக்கு தமிழகம், புதுச்சேரி, வடக்கு ஆந்திர கடல் பகுதிகள் கடும் கொந்தளிப்புடன் காணப்படும்.
புயலால், தமிழகத்திற்கும், புதுச்சேரிக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் வடக்கு தமிழகம், புதுச்சேரி பகுதி மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.