எந்தக் கொம்பனாலும் ஆட்சியை ஆட்டவும், அசைக்கவும் முடியாது.... ஜெயக்குமார் விளாசல்!
ஜனநாயகப் படுகொலைக்கு சொந்தக்காரர்களான திமுக ஜனநாயகப் படுகொலை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை : எம்ஜிஆர், ஜெயலலிதாவை அவமானப்படுத்தி ஜனநாயகப் படுகொலைக்கு காரணமான திமுக ஜனநாயகப் படுகொலை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது : திமுக முதலில் தன் முதுகில் உள்ள அழுக்கை தெரிந்து கொள்ள வேண்டும். ஜனநாயகப் படுகொலைக்கு ஒட்டு மொத்த சொந்தக்காரர்கள் திமுகவினர்தான்.
சட்டசபையில் எம்ஜிஆரை அவமானப்படுத்தினர், ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்து அலங்கோலப்படுத்தி மானபங்கப்படுத்தினர். வரலாற்றிலேயே மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை செய்தவர்கள் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தில் ஜனநாயகப் படுகொலை என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது.
ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்று ஸ்டாலினும், தினகரனும் கைகோர்த்து செயல்படுகிறார். யாருடன் சேர்ந்தாலும் எந்தக் கொம்பனாலும் ஆட்சியை ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது. தினகரனும், ஸ்டாலினும் சரி கோயபல்ஸ் பிரச்சாரம் செய்கின்றனர். ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகிவிடாது கோயபல்ஸ் பிரச்சாரம் தவிடுபொடியாகிவிடும்.
திங்களைப் பார்த்து டேஷ்டேஷ் டேஷ் குறைப்பது போலத் தான் இதுவும். காங்கிரஸ் கட்சி ஏற்கனவே மூழ்கிப் போன கப்பல் அதை தூக்கிவிட யாரும் இல்லை இந்த நிலையில் அதிமுக மூழ்கும் கப்பல் என்று ப.சிதம்பரம் சொல்கிறாரா என்று ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.