ஆர்.கே .நகர் இடைத்தேர்தலில் பேராயுதமாக பணம்.... தடுக்க முடியாத தேர்தல் ஆணையம்: சாடும் டி.ராஜா
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணம் பேராயுதமாக இருப்பதாகவும் இதைத் தடுக்க முடியாத நிலையில் தேர்தல் ஆணையம் உள்ளது என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதியில் அதிமுக வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளராக மகேந்திரன், சுயேட்சைகளில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து டி.ராஜா நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் டி. ராஜா கூறியதாவது:
நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாக்க ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. தமிழக நலன், ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட கொள்கைகளுக்காக நாங்கள் வேட்பாளரை அறிவித்துள்ளோம்.
இது ஜனநாயகத்தை பாதுகாக்கிற அரசியல் போராட்டம். இதற்கு ஆர்.கே.நகர் மக்கள் ஒத்துழைப்பு அளிப்பார்கள். பண பலத்தையும், அதிகார பலத்தையும் முறியடிக்க தொகுதி மக்கள் தயாராகிவிட்டனர்.
தொகுதிக்குள் நடக்கும் முறைகேடுகள் குறித்து தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் ஆணையம் தானாக முன்வந்து செயல்பட வேண்டும்.
தேர்தல் நடைமுறை தொடங்கியதுமே அந்தத் தொகுதியை தேர்தல் ஆணையம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும். இவை அனைத்தும் இந்திய அரசியல் சட்டத்திலேயே கூறப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் பணபலம், அதிகார துஷ்பிரயோகம் மிகுந்துள்ளது. வேட்பாளர்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. நாங்கள் சில கொள்கைகளை முன்வைத்தே வேட்பாளரை அறிவித்துள்ளோம். அந்த கொள்கைகள் நியாயமானது என்று நினைக்கும் அரசியல் கட்சிகள் எங்களை ஆதரிக்க வேண்டும்.
பொதுவாக தேர்தலில் பணம் ஆயுதமாக உள்ளது. இடைத்தேர்தலில் அது பேராயுதமாக உள்ளது. தேர்தல் ஆணையத்தால் அதைத் தடுக்க முடியவில்லை.
இவ்வாறு டி.ராஜா கூறினார்.












Click it and Unblock the Notifications