மும்முரமாக நடக்கும் சொத்து குவிப்பு வழக்கு... அலட்டாமல் ஜெ. பிறந்த நாள் கொண்டாடிய அதிமுகவினர்
சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கர்நாடகா அரசு தரப்பு வழக்கறிஞர் தவே ஆணித்தரமாக வாதாடி வருகிறார்... இன்றும் 2வது நாளாக விசாரணை நடைபெற உள்ளது. இன்றைய விசாரணையில் அவர் வாதங்களை வலுவாக முன்வைக்கக் கூடும் என தெரிகிறது. ஆனால் இந்த களேபரங்களைப் பற்றி எல்லாம் கிஞ்சித்தும் கவலைப்படாமல் 'அம்மா'வின் 68-வது பிறந்த நாளை அமர்க்களமாக கொண்டாடி வருகின்றனர் அதிமுகவினர்.
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடகா அரசு, திமுக பொதுச்செயலர் அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். இம்மனு மீது பிப்ரவரி 2-ந் தேதி முதல் நாள்தோறும் விசாரணை நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது.
Celebrations at AIADMK Headquarters in Chennai as CM Jayalalithaa turns 68 pic.twitter.com/uk2cfbdbGd
— ANI (@ANI_news) February 24, 2016
ஆனால் இவ்வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளில் ஒருவரான பினாகி சந்திரகோஷ், அருணாச்சல பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிப்பதால் வழக்கை ஒத்தி வைக்கக் கோரி ஜெயலலிதா தரப்பில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையும் உச்சநீதிமன்றம் ஏற்று விசாரணையை பிப்ரவரி 23-ந் தேதிக்கு ஒத்தி வைத்தது.
இருப்பினும் மீண்டும் ஒருவார காலம் வழக்கின் விசாரணையை ஒத்திவைக்கக் கோரி ஜெயலலிதா தரப்பில் மேலும் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஜெயலலிதா தரப்பைப் பொறுத்தவரையில் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக இவ்வழக்கு முடிந்துவிடக் கூடாது என்பதற்காக இம்மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதற்கு கர்நாடகா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் இந்த கால அவகாச கோரிக்கையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் நேற்று நிராகரித்து, கர்நாடகா அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே இறுதிவாதத்தை முன்வைக்க அனுமதித்தனர்.
துஷ்யந்த் தவே இன்னுடைய இறுதிவாதத்தை நறுக்கு தெறித்தாற் போல அடுக்கினார். அவர் அடுக்கிய அத்தனை வாதங்களும் ஜெயலலிதா தரப்பு பேரிடியாகத்தான் பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஒரு ரூபாய் ஊதியம் வாங்கிய ஜெயலலிதாவால் எப்படி இத்தனை கோடி சொத்து குவிக்க முடிந்தது? சொத்து மதிப்பீட்டில் கர்நாடகா உயர்நீதிமன்றம் பிழை செய்திருப்பது; ரூ5 கோடியிலேயே 21 சொகுசு பங்களாக்களை எப்படி கட்ட முடியும் என்றெல்லாம் அடுக்கியிருந்தார் தவே.
ஆனாலும் இதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் திமுக கொடுத்த என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா விளம்பரத்துக்கு பதில் கொடுப்பதில்தான் பிசியாக இருந்தனர். இன்றும் நாளையும் தவேயின் வாதம் தொடர இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து அன்பழகன் தரப்பும் ஜெயலலிதா தரப்பும் வாதங்களை முன்வைக்க உள்ளனர். தற்போதைய நடைமுறைப்படி பார்த்தால் அதிகபட்சம் 15 நாட்களுக்குள் இந்த வழக்கு முடிவடைந்து தீர்ப்பு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது (ஆனால் அதற்குள் எத்தனை இழுத்தடிப்பு முயற்சிகள் அரங்கேறுமோ). இருந்தாலும் அசட்டு நம்பிக்கையோடு சொத்துகுவிப்பு வழக்கின் மும்முரத்தை பற்றி கவலைப்படாதவர்களாக இன்று ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் படுதீவிரமாக இருக்கின்றனர் அதிமுகவினர்...
கோவில்களில் தீச்சட்டி ஏந்துவது, பச்சை குத்துவது என கோலாகலமான கொண்டாட்டத்தில் இருக்கின்றனர் அதிமுகவினர்... இன்றைய விசாரணையின் போது நீதிபதிகள் ஏதேனும் கடுமையான கருத்துகளைத் தெரிவித்தாலும் கூட அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் 'அம்மாவின் பார்வை பட்டாலே போதும்...அது எங்களுக்கு போர்வை' என்ற ரேஞ்சில்தான் வலம் போகிறார்களோ அதிமுகவினர்....












Click it and Unblock the Notifications