தலித் இளைஞர் படுகொலை: தமிழக அரசுக்கு தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ்
திருப்பூர்: உடுமலைப்பேட்டையில் நடந்த கவுரவக் கொலை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. கவுரவக் கொலை செய்யப்பட்ட சங்கரின் உடலை வாங்க மறுத்து, உடுமலைப்பேட்டையில், அவரது உறவினர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
திருப்பூர் மாவட்டம் குமரலிங்கம் பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி சங்கர், 22. தலித் சமூகத்தைச் சேர்ந்த சங்கர், உயர் வகுப்பைச் சேர்ந்த 19 வயது கவுசல்யாவை 8 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் பெற்றோர் சங்கரிடமிருந்து பிரிந்து வந்து விடும்படி கவுசல்யாவை அவரது உறவினர்கள் தொடர்ந்து மிரட்டி வந்திருக்கிறார்கள். இரண்டு வாரங்களுக்கு முன்புகூட சங்கர் வீட்டுக்கு வந்து மிரட்டிச் சென்றுள்ளார்கள்.

இதனிடையே உடுமலைப்பேட்டையில் உள்ள கடைக்கு நேற்று சங்கரும் கவுசல்யாவும் சென்ற போது அவர்களை பின் தொடர்ந்து சென்ற கும்பல், ஒன்று மறைந்திருந்து அரிவாளால் தாக்கி சங்கரையும் கவுசல்யாவையும் ரத்த வெள்ளத்தில் துடிக்கவிட்டுச் சென்றார்கள். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் சங்கர் உயிரிழந்தார்; கவுசல்யா உயிருக்குப் போராடி வருகிறார்.
சங்கரின் உடலுக்கு கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. கொலை செய்யப்பட்ட சங்கரின் உடலை வாங்க மறுத்து, உடுமலைப்பேட்டையில், அவரது உறவினர்கள் உள்பட 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
சங்கர் கவுரவக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அவரது உறவினர்கள், கடைகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சங்கரின் உடலை வாங்க மறுத்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
கவுசல்யாவின் பெற்றோர், சின்னசாமி, அன்னலட்சுமி மற்றும் தாய்மாமன் பாண்டித்துரை ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்றும், கொலையாளிகள் மீது எஸ்.சி., எஸ்டி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
சாலை மறியலால் குமரலிங்கத்தில் பதற்றம் நிலவி வரும் நிலையில், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சங்கர் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகளை அமைத்துள்ளனர்.
அரசுக்கு நோட்டீஸ்
உடுமலைப்பேட்டையில் நடந்த கவுரவக்கொலை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications