மதுரை மீண்டும் ரத்த சம்பவம்... அழகிரியின் மகன் துரை தயாநிதியின் நண்பருக்கு அரிவாள் வெட்டு...
மதுரை: மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதியின் நண்பர் ராமகிருஷ்ணனை அரிவாளால் வெட்டி சாய்த்து மதுரையில் மறுபடியும் அரசியல் ரத்த விளையாட்டை ஆரம்பித்திருக்கின்றனர் வன்முறையாளர்கள். ஆனால் இந்த சம்பவத்தில் உயிர்பலி எதுவும் ஏற்படவில்லை என்பதுதான் மதுரை மக்களுக்கு சற்றே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
செத்து செத்து விளையாடுவது மதுரைக்காரர்களுக்கு ஒன்றும் புதிய விசயமில்லை... ஆனால் மதுரையில் சம்பவங்கள் அரங்கேறுவதும் அரசியல் பிரச்சினையில் ரத்தக்களறிகள் அடிக்கடி நடப்பதும் ஒன்றும் புதிய விசயமில்லை.
ஆனால் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை மையமாக வைத்து மதுரையில் ரத்தவிளையாட்டுகள் அடிக்கடி நடக்கின்றன
தா.கிருஷ்ணன், தினகரன் அலுவலகம் எரிப்பு, பொட்டு சுரேஷ் கொலை என மதுரை வீதிகளில் அடிக்கடி ரத்தத்தினால் அபிஷேகம் செய்யப்பட்டுள்ளன. தற்போது மீண்டும் அப்படி ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது இம்முறை உயிர்பலியாகவில்லை என்பது சற்றே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

பொட்டு சுரேஷ் கொலை வழக்கு
பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் அழகிரியின் நட்பு வட்டத்தில் இருந்து ஸ்டாலின் பக்கம் சாய்ந்த அட்டாக் பாண்டி, நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், துரை தயாநிதியின் உயிர் நண்பரான ராமகிருஷ்ணன் உயிருக்கு சனிக்கிழமை இரவு ஆபத்து வந்துள்ளது. இதற்கு காரணம் அட்டாக் பாண்டியின் ஆட்கள்தான் என்ற தகவல் வெளியாகவே இரண்டு பேர் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளனர்.

கொடூர தாக்குதல்
துரை தயாநிதியின் நண்பர் ராமகிருஷ்ணன் என்ற ராம்கி சனிக்கிழமையன்று இரவு புதூர் பகுதியில் இருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாக தாக்கினர்.இதில் பலத்த காயமடைந்த அவர் இங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கொலைமுயற்சி
அழகிரியின் வலது கரமாக செயல்பட்ட பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் சிலமாதங்களுக்கு முன் கைதான அட்டாக் பாண்டி பல பேட்டிகளில் ராமகிருஷ்ணனை பற்றி கூறியிருந்தார் இதனடிப்படையில், சில நாள்களுக்கு முன்பு போலீசார் ராம்கியை அழைத்து விசாரணை நடத்திருந்தனர். இந்த நிலையில் ராமகிருஷ்ணனை கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர்.

நீ நல்லா இருக்கலாமா?
மதுரை ஆண்டாள்புரத்தில் வசிக்கும் ராமகிருஷ்ணன், சீன பொருட்கள் இறக்குமதி மற்றும் பர்னிச்சர் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். தயாநிதியின் நெருங்கிய நண்பரான இவர், சனிக்கிழமையன்று இரவு புதுார் கற்பகநகரில் உள்ள சலுான் கடைக்கு முடிவெட்ட சென்றார். பின், இரவு 11:30 மணிக்கு, காரில் புறப்பட்ட போது, கைலி, ஹெல்மெட் அணிந்து டூவீலரில் வந்த ஒருவர், 'உன்னால்தாண்டா நாங்க இவ்வளவு கஷ்டப்படுகிறோம். நீ மட்டும் நல்லா இருக்கலாமா' என கூறியவாறே வயிறு, கால், கை, இடுப்பில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியுள்ளனர்.

நலம் விசாரித்த அழகிரி
உயிருக்கு ஆபத்தான நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை அழகிரி மற்றும் குடும்பத்தினர் சந்தித்து நலம் விசாரித்தனர். மதுரை பக்கமே தலை காட்டமல் இருந்த துரை தயாநிதி, பதறியடித்தபடி நேரில் வந்து கண்ணீர் மல்க நண்பனை நலம் விசாரித்தாராம்.

பொட்டு கொலை வரவு செலவு
பொட்டு சுரேஷ் கொலை வழக்கு விசாரணைக்கான செலவுத்தொகை, வரவேண்டியவர்களிடம் இருந்து தாமதமாகுவதால் அவர்களை எச்சரிக்கும் பொருட்டே ராம்கி வெட்டப்பட்டிருக்கலாம் என்று மதுரை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தேகத்தின் பேரில், பாண்டியின் மைத்துனர் விஜயபாண்டி கூட்டாளி ஆரோக்கியபிரபுவின் தம்பி சகாயபிரபு மற்றும் அவரது நண்பர்வேல்முருகனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அரசியல் கொலைகள்
பொட்டு சுரேஷ் கொலைக்கும் ராமகிருஷ்ணனுக்கு தொடர்பு இருப்பதாக ஏற்கனவே பேட்டி ஒன்றில் அட்டாக் பாண்டி கூறியிருந்தார். ஆனால் போலீஸ் விசாரணையில் ராமகிருஷ்ணன் பற்றி அட்டாப் பாண்டி வாயே திறக்கவில்லையாம். இந்தநிலையில் ராமகிருஷ்ணன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது மதுரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications