தயாநிதி மாறன் பிஏ., சன் டிவி ஊழியர்கள் 2 பேருக்கு பிப்.4வரை காவல்
சென்னை: சன் டிவிக்கு பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனின் கூடுதல் தனிச் செயலர் உள்பட 3 பேர் 14 நாட்கள் நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மூவரையும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சிபிஐ மனுத்தாக்கல் செய்துள்ளது.
சன் டிவிக்கு முறைகேடாக நவீன தொலைபேசி இணைப்புகள் கொடுக்கப்பட்ட வழக்கில், மத்திய தொலைத்தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனின் கூடுதல் தனிச் செயலராக இருந்த கவுதமன், சன் டி.வி. ஊழியர்கள் இருவரை சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.

தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது சுமார் 323 அதிக சக்தி வாய்ந்த பி.எஸ்.என்.எல். இணைப்புகள் சென்னை போட் கிளப் பகுதியில் உள்ள தயாநிதி மாறன் வீட்டுக்கு வழங்கப்பட்டு, பின்னர் இவை சன் டிவி அலுவலகத்துக்கு முறைகேடாக வழங்கப்பட்டன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தேவையான சக்தி வாய்ந்த இந்த இணைப்புகள் அதிகக் கட்டணம் கொண்டவை. இதைத் தான் அமைச்சராக இருந்த தயாநிதி வீட்டுக்குத் தந்து அதை சன் டிவி தவறாக பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.
சட்ட விரோத இணைப்பு தொடர்பாக ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம் இதுகுறித்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டது.
அதன்படி தயாநிதி மாறன், 2007-ஆம் ஆண்டில் பிஎஸ்என்எல் பொது மேலாளராக இருந்த கே. பிரம்மநாதன், அந்த நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் எம்.பி. வேலுசாமி ஆகியோர் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது. தயாநிதி மாறன் பெயரும் இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் விசாரணை நடத்தி வருகிறார்கள். சன்டிவியின் உயர் பதவிகளில் இருந்தவர்களிடமும் சிபிஐ விசாரணை மேற்கொண்டது.
இந் நிலையில் புதன்கிழமை இரவு டெல்லியில் இருந்து வந்த சிபிஐ குழுவினர் தயாநிதி மாறனின் கூடுதல் தனிச் செயலராக இருந்த வி.கவுதமன், சன் டி.வியின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், சன் டி.வியின் எலக்ட்ரீஷியன் கே.எஸ்.ரவி ஆகியோரை கைது செய்தனர்.
அவர்கள் மூவரும் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 14 நாட்கள் (பிப்ரவரி 4 வரை) நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
4 நாட்கள் விசாரிக்க மனு
இதனிடையே சிபிஐ, இவர்களை 4 நாட்கள் காவலில் எடுத்துவிசாரிக்க கோரி மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
ஜாமீன் கேட்டு மனு
இதனிடையே கவுதமன், எஸ். கண்ணன், எல்.எஸ். ரவி ஆகிய மூவரும் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களது மனு வரும் 27ம் தேதி சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications