சென்னையில் பயங்கரம்… பர்தா அணிந்து வந்து பெண்ணைக் கொன்று நகைகள் கொள்ளை!
சென்னை: சென்னை ஜாம் பஜார் பகுதியில், தனியாக வீட்டில் இருந்த பெண்ணைக் கட்டிப் போட்டு விட்டு பின்னர் கொலையும் செய்து நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் சிலர்.
பெண் வேடமிட்டு அதாவது பர்தா அணிந்து வந்து இந்த துணிகரச் செயலை அவர்கள் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜாம்பஜாரை சேர்ந்தவர் சையது அலி. இவரது மனைவி மொகரூனிஷா. இன்று பிற்பகல் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இவரது மகன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்.
அப்போது பெண்களை போன்று பர்தா அணிந்து வந்த மர்ம நபர்கள், வெளிநாட்டில் வேலை பார்க்கும் மெகரூனிஷா மகனை தங்களுக்கு தெரியும் என்றும், அவர் அனுப்பியதாகவும் கூறியுள்ளனர்.
இதனை நம்பி அவர் மர்ம நபர்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மொகரூனிஷாவை கட்டிப்போட்டு கொலை செய்த நபர்கள், வீட்டில் இருந்த 50 பவுன் நகைகள் மற்றும் ரூபாய் 2 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
வீடு திரும்பிய சையது அலி, சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீஸுக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் மோப்ப நாய்களுடன் விரைந்து வந்தனர்.
பட்டப் பகலில் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில் நடந்த இந்தக் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸார் தனிப்படைகளை அமைத்து தற்போது கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.