கடன் தொல்லை: குடும்பத்துடன் ரயில் முன்பு பாய்ந்த மாமல்லபுரம் கான்டிராக்டர்
சென்னை: செங்கல்பட்டு அருகே கட்டுமான தொழில் ஒப்பந்ததாரர் ஒருவர் கடன் தொல்லை தாங்க முடியாமல் குடும்பத்துடன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
மாமல்லபுரம் மாதா கோவில் தெருவில் வசித்து வந்தவர் குமரன். கட்டுமான தொழில் ஒப்பந்ததாரரான அவர் ரூ.50 லட்சத்திற்கும் மேல் கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் திணறிய அவர் தனது மனைவி மாலதி, மகள் மோனிகா (15), மகன் கணேஷ்(6) ஆகியோருடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார். இரண்டு பூச்சிக் கொல்லி மருந்து பாட்டில்களை வாங்கினார். குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் டோல் கேட் சென்றுள்ளார்.

அங்கு சென்றபோது விஷம் குடித்து இறந்துவிடாமல் இருந்துவிட்டால் என்ன செய்வது என்று நினைத்த அவர் குடும்பத்தோடு ரயில் முன்பு பாய முடிவு செய்தார். அதன்படி வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த ரயில் முன்பு அவர் குடும்பத்துடன் குதித்தார். இதில் குமரன், அவரது மனைவி மாலதி, மகள் மோனிகா ஆகியோர் பலியாகினர்.
குமரனின் மகன் கணேஷ் மட்டும் படுகாயங்களுடன் உயிர் பிழைத்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணேஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மேலும் பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications