அழிஞ்சு போயிருவடா... தீபக்குக்கு தீபா சாபம்!
மீண்டும் போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்றுள்ள தீபா, தனது சகோதரர் தீபக்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை: போயஸ்கார்டனுக்கு மீண்டும் தனது கணவர் மாதவனுடன் தீபா வந்தார். அப்போது அவர் தனது தம்பியான தீபக்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று காலை திடீரென போயஸ் கார்டனுக்கு திடீரென வந்தார் தீபா. தனது தம்பி தீபக்தான் ஜெயலலிதாவின் படத்துக்கு பூஜை செய்யுமாறு அழைத்ததாக கூறினார்.
தன்னை திட்டமிட்டு வரவழைத்து கொல்ல முயன்றதாகவும் பரபரப்பு குற்றம்சாட்டினார். தீபாவின் ஆதரவாளர்களும் திரண்டதால் போயஸ் கார்டன் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் பிற்பகல் மீண்டும் போயஸ்கார்டனுக்கு வந்த தீபா, தீபக்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தான் எந்தப் பிரச்சினையும் செய்யவில்லை என்று கூறிய அவர் தீபக் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசாரிடம் கோரிக்கை விடுத்தார்.
நடிக்காதடா தீபக், அழிஞ்சுபோயிடுவடா, ஏமாத்ததடா, மாதவனுக்கு ஏதாவது ஆனால் நீதான் பொறுப்பு என சரமாரியாக சாடினார். மேலும் உனக்கும் எனக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தெரிவித்தார்.
தீபாவை போலீசார் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனாலும் தீபா விடாபிடியாக போஸ்கார்டனில் தீபக்குடன் மோதலில் ஈடுபட்டார். இதனால் போயஸ்கார்டனில் மீண்டும் பரபரப்பு ஏறபட்டது.