ஓ.பி.எஸ்சை புறக்கணித்து தீபா திடீர் பல்டி..கட்சி அலுவலகத்தையும் திறந்தார்
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தனது வீட்டில் புதிய கட்சி அலுவலகத்தை இன்று திறந்து வைத்தார். பன்னீர் செல்வத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதில்லை என்றும் தீபா திட்டவட்டமாக தெரிவித்தார்.
சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தி.நகரில் உள்ள தனது வீட்டில் புதிய கட்சி அலுவலகத்தைத் திறந்தார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு கட்சி இரு பிரிவுகளாகப் பிளவுப்பட்டன. ஒன்று சசிகலா அணி, மற்றொன்று தீபா அணி. இந்நிலையில் சசிகலாவின் தலைமையை ஏற்க விரும்பாத நிர்வாகிகள் பலர் தீபாவுக்கு ஆதரவளித்தனர்.
இந்நிலையில் இந்த இரட்டை பிளவானது பன்னீர் செல்வமும், சசிகலாவுக்கு எதிராக திடீர் போர்க்கொடி உயர்த்தியதால் கட்சி பிளவு எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. இந்நிலையில் தீபா தனது அரசியல் பிரவேசத்தை ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று வெளியிடுவதாக தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று தீபா புதிய கட்சியைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அவர் தியாகராய நகரில் உள்ள தனது வீட்டில் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். கட்சியின் பெயர், கொடி, நிர்வாகிகள் ஆகியவை குறித்து இன்று வெளியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் பன்னீர் செல்வத்துடன் இருகரமாக செயல்பட உள்ளதாக தெரிவித்திருந்த தீபா, தற்போது திடீர் பல்டி அடித்து தனித்து செயல்பட முடிவு செய்துள்ளார். இன்று ஆர்.கே. நகரில் பன்னீர் செல்வம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதில்லை என்றும் தீபா அறிவித்துள்ளார்.
இதனிடையே, அதிமுக துணை பொதுச் செயலாளர் தினகரனுக்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும் போரக் கொடி உயர்த்தியதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.