சேலம் அதிமுக செம வேகம்.. சசிக்கு எதிராக ஜெ. தீபா பேரவை தொடங்கினர்!
சேலத்தில் அதிமுக நிர்வாகிகள் சிலர் இணைந்து ஜெ.தீபா பேரவையை தொடங்கியுள்ளனர்.
சேலம்: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவை ஒட்டி பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. தங்கள் தலைவி இருந்த இடத்தில் மற்ற யாரையும் வைத்து பார்க்க தொண்டர்கள் மறுக்கின்றனர்.
அதிமுக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றதை விமர்சிக்காத தொண்டர்கள், அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை ஏற்க மறுக்கின்றனர். இதனால் தமிழகம் முழுதும் தொண்டர்கள் தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

சசிகலாவை ஆதரித்து ஒட்டப்படும் போஸ்டர்களை கிழித்தும் சாணம் அடித்தும் வருகின்றனர். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆரம்பத்திலிருந்தே ஜெயலலிதா மரணம் குறித்தும், அவரது சொத்துக்கள் குறித்தும் பிரச்சனை எழுப்பி வருகிறார். ஜெயலலிதா அரசியலில் விட்டு சென்ற இடத்தை தன்னால் தான் நிரப்ப முடியும் என்று கூறியுள்ளார்.
சசிகலாவை எதிர்ப்போரும், ஜெயலலிதாவை போன்ற சாயலும், குரலும் கொண்ட தீபாவை ஏற்று வரவேற்று போஸ்டர், பேனர்கள் வைக்கின்றனர். சென்னையில் அதிலும் ஒரு படி மேலே போய் தொண்டர்கள் அதிமுக கொடியில் அண்ணா படத்துடன் ஜெயலலிதா, தீபா படத்தை இணைத்து கொடியை ஏற்றி இனிப்பு வழங்கினர்.
இந்த நிலையில் சேலத்தில் ஜெ. தீபா பேரவை தொடங்கப்பட்டுள்ளது. சேலத்தில் 44வது வார்டு அதிமுக நிர்வாகிகள் தொடங்கினர். ஜெ.தீபாவை அதிமுகவிற்கு தலைமையேற்க அழைப்பு விடுத்து இந்த பேரவை தொடங்கப்பட்டதாக தெரிவித்தனர். 60 வார்டுகளிலும் உள்ள அதிமுகவினரை இந்த பேரவையில் இணைக்க முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications