சுத்தமான குடிநீர்.. மீனவர்களுக்கு படகு.. பெண்களுக்கு தையல் மிஷின்.. இது தீபா தேர்தல் அறிக்கை !
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை: ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் போட்டியிடும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் தண்டையார்பேட்டையில் சுத்தமான குடிநீர் வழங்கப்படும், மீனவர்களுக்கு மானிய விலையில் படகு, பெண்களுக்கு தையல் மிஷின் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் காலியான ஆர்.கே. நகர் தொகுதியில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. அதிமுக சார்பில் இரண்டு அணிகள் போட்டியிடுகின்றன. ஒன்று பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி, இரட்டை மின் விளக்கு சின்னத்திலும், சசிகலா அணி சார்பில் அதிமுக அம்மா என்ற பெயரில் தொப்பி சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.
இந்தத் தேர்தலில் முக்கிய வேட்பாளர்களாக டிடிவி தினகரன், மதுசூதனன், மருதுகணேஷ், மதிவாணன், லோகநாதன், கங்கை அமரன், கலைக்கோட்டுதயம், தீபா ஆகியோர் களத்தில் உள்ளனர். அதிமுக தொண்டர்களின் வாக்கு யாருக்கு அதிகமாக கிடைக்கும் என்பதே இரு அணியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
-இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு மையம், உடற்பயிற்சி மையம் அமைக்கப்படும்
-சலவைத் தொழிலாளர்களுக்கு இலவசமாக சலவை மிஷின்கள் வழங்கப்படும்
-மாணவர்கள் பலன் பெறும் இலவச ஐஏஎஸ் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்
-மீனவர்களுக்கு மானிய விலையில் படகுகள், உபகரணங்கள் வாங்கித் தரப்படும்
-தண்டையார்பேட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் சுத்தமான குடிநீர் வழங்கப்படும்
-மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கி மூலம் கடன் வாங்கித் தரப்படும்
-கொருக்குப்பேட்டையில் புதிய சுரங்க வழிப்பாதை அமைக்கப்படும்
-பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி அளிக்கப்பட்டு தையல் மிஷின் வாங்கித் தரப்படும்