ஓட ஓட விரட்டியடியுங்கள்.. ஆர்.கே.நகரில் கொந்தளித்த தீபா!
சென்னை: ஜெயலலிதா பெயரைச் சொல்லிக் கொண்டு யாராவது வந்தால் அவர்களை ஓட ஓட விரட்டியடியுங்கள் என்று தீபா திடீர் கொந்தளிப்பைக் காட்டியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பிரசாரத்தின்போது ஆட்டோவில் அமர்ந்து கொண்டு பேசும்போது அதாவது பிரசாரம் செய்தபோது இவ்வாறு கூறினார் தீபா. ஆனால் இப்படிச் சொல்வதற்கு முன்பும், சொல்லிய பின்பும் ஜெயலலிதா பெயரை அடிக்கடி உச்சரித்துப் பேசினார் என்பது சுவாரஸ்யமானது.
புது வண்ணாரப்பேட்டை பகுதியில் நேற்று தீபா பிரசாரம் செய்து பேசினார். தீபாவின் தீப்பொறி பேச்சிலிருந்து சில உங்களுக்காக:
பதவி ஆசையில்
இங்கு பதவி ஆசையில் சிலர் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். ஜெயலலிதா பெயரைக் கூறிக் கொண்டு வருகிறார்கள். ஜெயலலிதா என்ற மாபெரும் மக்கள் தலைவர் நின்று வென்ற இத்தொகுதியில் யாரை வைத்து அழகு பார்ப்பது என்று உங்களுக்குத் தெரியும்.
தப்புக் கணக்கு
ஜெயலலிதா பெயரைக் கூறி அனுதாபத்தை சம்பாதித்து அதில் வாக்குகளை சேகரித்து விடலாம் என்று சிலர் தப்புக் கணக்கு போடுகிறார்கள். ஆர்.கே.நகர் தொகுதி மக்களே ஏமாந்து விடாதீர்கள்.
விரட்டியடியுங்கள்
ஜெயலலிதா பெயரை கூறிக் கொண்டு யாராவது வாக்கு கேட்டு வந்தால் அவர்களை விரட்டியடியுங்கள். ஓட ஓட விரட்டியடியுங்கள். அவர்களுக்கு ஓட்டுப் போடாதீர்கள்.
எனக்கு ஓட்டுப் போடுங்கள்
ஜெயலலிதாவின் சபதங்கள் நிறைவேறிட, அவர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிட, எனது கரத்திற்கு வலு சேருங்கள். எனக்கு வாக்களியுங்கள். என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார் தீபா.