தீபாவளிப் பண்டிகை: அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை இரவில் வெடிக்கக் கூடாது
சென்னை: தீபாவளி பண்டிகை நாள்களின் போது அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை இரவு நேரங்களில் வெடிக்கக் கூடாது என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.
இது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிடப்பட்ட செய்தி:
பண்டிகை தினங்களில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் எனவும், இரவில் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும். மேலும் மருத்துவமனை, நீதிமன்றங்கள், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அமைதியான இடங்களுக்கு அருகே பட்டாசுகள் வெடிக்கக் கூடாது.
இதனை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பட்டாசு வகைகள், அதிலுள்ள வேதிப் பொருள்கள், வெடிக்கும் போது அவை ஏற்படுத்தும் ஒலி மாசுகள் குறித்த தகவல்களை விற்பனையாளர்கள் அறிவிப்புப் பலகையில் எழுதி வைத்திருக்க வேண்டும். அதிகபட்ச அளவான 125 டெசிபலுக்கு மேல் ஒலி எழுப்பும் பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications