ரூ.1000 கோடி லஞ்சப் பணம் பதுக்கியதாக புகார்: ஈ.வி.கே.எஸ் மீது அவதூறு வழக்கு.. தொடர்ந்தார் அமைச்சர்
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அதிமுக ஆட்சி லஞ்சத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு பல சான்றுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழக அரசின் பல்வேறு அமைச்சகங்களில் லஞ்ச வேட்டை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது என்று குற்றம்சாட்டினார்.

மேலும் அவர், ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் துறைகளில் நடத்துகிற வசூல் வேட்டை முழுவதையும் அதிமுக தலைவிக்கு கப்பம் கட்ட வேண்டிய பரிதாப நிலையில் இருக்கிறார்கள். கப்பம் கட்டுவதில் ஒரு பங்கை சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் எடுத்துக் கொள்வதற்காகத் தான் கொத்தடிமை அரசியலை நடத்தி வருகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழக அமைச்சர்கள் தங்கள் துறைகளில் வசூல்வேட்டை நடத்தி, வருகிற தொகை முழுவதும் சேலம் 5 ரோடு பகுதி கண்ணகி தெருவில் உள்ள அமைச்சர் இடைப்பாடி பழனிச்சாமி வீட்டில் ஆயிரம் கோடி ரூபாய் வருகிற சட்டமன்றத் தேர்தல் செலவுகளுக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சேலம் பகுதி மக்கள் பரவலாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.
இது குறித்து வருமான வரித்துறையும், தேர்தல் கமிஷனும் இடைப்பாடி பழனிச்சாமி வீட்டை உடனடியாக சோதனையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதால் தான் அவரது செல்வாக்கு அமைச்சரவையில் பலமடங்கு உயர்ந்திருப்பதாகவும் அவர் புகார் தெரிவித்தார்.
இந்த நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அமைச்சர் குறித்து அவதூறாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி அளித்துள்ளார். அவரது பேட்டி தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை கிரிமினல் அவதூறு சட்டத்தின்கீழ் தண்டிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி சார்பில் மாநகர அரசு வழக்கறிஞர் எம்.எஸ்.ஜெகன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications