டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம்.. தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!
தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Recommended Video

டெல்லி: தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரன், குக்கர் சின்னத்தை தனது அணி தொடர்ந்து பயன்படுத்த அனுமதி கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வகையில் தனது அணி அதிமுக அம்மா என்ற பெயரையும், குக்கர் சின்னத்தையும் தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

தேர்தல் ஆணையம் பதில்
இந்த வழக்கு விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட முடியாது என தெரிவித்தது.

பதில் மனு தாக்கல்
உள்ளாட்சி தேர்தல் மாநில தேர்தல் ஆணையமே நடத்துவதால் சின்னம் குறித்து மாநில தேர்தல் ஆணையமே முடிவு செய்யும். எனவே, டிடிவி தினகரன் கோரிக்கையை தள்ளுபடி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் டெல்லி ஹைகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்திருந்தது.

தினகரனுக்கு குக்கர் சின்னம்
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் டெல்லி ஹைகோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கட்சிப் பெயர்
மேலும் கட்சிக்கு தினகரன் ஒதுக்கக்கோரிய பெயர்களில் ஒன்றை ஒதுக்குமாறும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எம்ஜிஆர் அம்மா திமுக, எம்ஜிஆர் அம்மா திக மற்றும் அனைத்திந்திய அண்ணா அம்மா திமுக ஆகிய மூன்று பெயர்களில் ஒன்றை ஒதுக்குமாறு தினகரன் கோரியிருந்தார்.

மகிழ்ச்சி
இவற்றில் ஒரு பெயரை ஒதுக்குமாறும் தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் தினகரன் அணியினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications