500,1000 ரூபாய் விவகாரம் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம்: சீதாராம் யெச்சூரி
ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவரப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது.
நெல்லை: பண நோட்டுக்களான 500,1000 செல்லாது என அறிவிப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தில் வரும் குளிர்கால கூட்டத் தொடரில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவரப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு பண நோட்டுக்கள் செல்லாது என்றும், புதிய 2000 ரூபாய் நோட்டினை அறிமுகம் செய்துள்ளது குறித்தும் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவர இருக்கிறோம். இந்த திடீர் அறிவிப்பினால் அன்றாட நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. சரக்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வணிகம் முழுமையாக தடைபட்டுள்ளது.
பண நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டு அதற்கு வருகிற டிச.31 ஆம் தேதி வரையிலாவது கால அவகாசம் வழங்கியிருக்க வேண்டும். இவ்வாறு உடனடியாக அமலுக்கு கொண்டுவரப்பட்டது அனைத்து நடவடிக்கைகளையும் முடக்கியுள்ளது. கருப்பு பணத்தை ஒழிப்பதாக அரசு கூறுவதில் எந்த உண்மையும் இல்லை.இது கேலிக் கூத்தானது.
கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்கள் அதனை வெளிநாட்டு வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளனர். மேலும், தங்கமாகவும் அவற்றை பதுக்கி வைத்துள்ளனர். பொது சிவில் சட்டத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடுமையாக எதிர்க்கிறது.
இவ்வாறு சீதாராம் யெச்சூரி கூறினார்.
முன்னதாக இந்துக் கல்லூரியில் பாரதியார் படித்த வகுப்பிற்கு சென்று சிறிது நேரம் யெச்சூரி அமர்ந்திருந்தார்.