பழைய 500,1000 ரூபாயை ரிசர்வ் வங்கியில் இன்று முதல் மார்ச் மாதம் வரை மாற்றலாம்
செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாயை ரிசர்வ் வங்கியில் கொடுத்து 2000 ரூபாய் வரை மாற்றிகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார். கடந்த 15 நாட்களுக்கும் மேலாக கையில் 1000 மற்றும் 500 ரூபாயை வைத்துக்கொண்டு மக்கள் அலைமோதினர்.
செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கி, தபால் நிலையங்களில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்வதற்கு நவம்பர் 10ம் தேதி முதல் மத்திய அரசு ஏற்பாடு செய்தது. அதன்படி பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றம் செய்வதற்கு முதலில் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இந்த உச்ச வரம்பு ரூ.4,500 ஆக உயர்த்தப்பட்டது. திடீரென்று அந்த தொகை ரூ.2,000 ஆக குறைக்கப்பட்டது.

பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றுவதற்கு ஒருவர் மீண்டும், மீண்டும் வருவதை தடுக்க விரலில் அடையாள மை வைக்கும் திட்டத்தையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதனையடுத்து ஓரளவு கூட்டம் குறைந்தது.
ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியாமல் நாடு முழுவதும் மக்கள் திண்டாடினர். புதிய நோட்டுக்களை எடுப்பதற்கு வசதியாக நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் வங்கிகள், தபால் நிலையங்களில் செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்காக மத்திய அரசு அறிவித்திருந்த காலக்கெடு நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தது. இனி டெபாசிட் மட்டுமே செய்ய முடியும்.
இதனையடுத்து இன்று முதல் ரிசர்வ் வங்கியில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மார்ச் 31ம் தேதிவரை உரிய ஆவணங்களை கொண்டு வந்து மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு www.rbi.org.in and www.rbi.org.in ஆகிய இணைய தளங்களை பார்க்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications