ரூபாய் நோட்டு செல்லாது.. மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு நவ. 28ல் இடதுசாரிகள் போராட்டம்
ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பை எதிர்த்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு இடதுசாரிகள் போராட்டம் நடத்த உள்ளனர்.
சென்னை: மோடி அரசு கொண்டு வந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை கண்டித்து வரும் 28ம் தேதி தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் இந்தியா முழுவதும் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். பழைய நோட்டுக்களை மாற்றுவதற்காக வங்கி வாசல் முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்ததில் இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். சிறு, குறு நிறுவனங்கள், தொழில்கள், பெரும் வர்த்தகங்கள் என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற அசாதாரண சூழல் நிலவக் காரணமாக இருந்த மத்திய அரசையும் பாஜகவையும் கண்டித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மேலும், வரும் 28ம் தேதி அன்று கண்டன நாள் அனுசரிப்பு தினமாக எதிர்க்கட்சிகள் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வகையில் தமிழகத்தில் உள்ள இடதுசாரி கட்சிகள் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications