ரூபாய் நோட்டு செல்லாது... ஏழை மக்கள் மீது மோடி தொடுத்தப் போர்.. ஜி. ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு
ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் ஏழை மக்கள் மீது மோடி அரசு போர் தொடுத்துள்ளது என்று ஜி. ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: கறுப்பு பணத்தை ஒழிப்பதாகச் சொல்லிக் கொண்டு ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் எழை, எளிய மக்கள் மீது மோடி அரசு போர் தொடுத்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்தியில் ஆளும் மோடி அரசு அறிவித்தது. இதனையடுத்து நாடு முழுவதும் ஒரு நெருக்கடி நிலை உருவானது போல் மக்கள் கடும் அவதிக்கு ஆளானார். மறுநாளில் இருந்து வங்கிகள், அஞ்சலகங்களில் தங்களிடம் உள்ள பழைய நோட்டை மாற்ற நீண்ட வரிசையில் நின்று பணத்தை மாற்றி வருகின்றனர். இப்படி பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக வரிசையில் நின்றவர்களில் இதுவரை 75 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், மோடி அரசின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ரூபாய் நோட்டு செல்லாது தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று கோரி அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
மேலும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் என அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்தியா முழுவதும் இன்று ஒரு நாள் முழுவதும் பல்வேறு வடிவிலான போராட்டங்களை நடத்தி வருகின்றன.
அதன்படி, சென்னை நுங்கம்பாக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல், சுகி ஆகிய இடதுசாரி கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
ஆர்ப்பாட்டத்தின் போது ஜி. ராமகிருஷ்ணன் பேசியதாவது:
ரூபாய் நோட்டு செல்லாது என்று மோடி அரசு அறிவித்திருப்பது மக்கள் மீது தொடுக்கப்பட்ட யுத்தம். இந்த அறிவிப்பால் கடந்த 20 நாட்களாக மீனவர்கள், சிறு, குறு வியாபாரிகள், வணிகர்கள், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மோடி சொல்வது போல் கறுப்புப் பணத்தை இந்த நடவடிக்கையின் மூலம் ஒழிக்க முடியாது. ஏனென்னறால் 90 சதவீத கறுப்புப் பணம் வெளிநாட்டு வங்கிகளில் உள்ளது. மீதிப் பணம் இந்தியாவிலேயே சொத்துக்களாக குவிக்கப்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று நவம்பர் 8ம் தேதி மோடி அறிவிப்பதற்கு முன்பாக கொல்கத்தாவில் உள்ள பாஜகவினர் 3 கோடி ரூபாய் மதிப்பில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மொத்தமாக செலுத்தியுள்ளனர். ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்த பின்னர், அதே பாஜவினர் 2000 ரூபாய் புதிய நோட்டைக் கட்டுக்கட்டாக வைத்துள்ளனர்.
ஏழை எளிய மக்கள் பாதிப்படையும் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் மாறும் வரை பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். டிச. 30ம் தேதிக்கு பின்னரும் பழைய ரூபாய் நோட்டுக்கள் செல்லும் விதத்தில் அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று ஜி. ராமகிருஷ்ணன் கூறினார்.