டெங்கு பற்றி பேசிய கலெக்டர்... பேப்பரில் கோலம் போட்ட பெண் அதிகாரி
டெங்குவை ஒழிக்க ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்ற போது பெண் அதிகாரி ஒருவர் அலட்சியமாக பேப்பரில் கோலம் போட்ட படம் தற்போது வைரலாக பரவியுள்ளது.
Recommended Video
சிவகங்கை: டெங்குவை ஒழிக்க ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பொழுதை கழிக்க பெண் அதிகாரி ஒருவர் கோலம் போட்ட படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமாக பாதிக்கப்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல் தினந்தோறும் குறைந்தது 6 பேருக்கு மேல் இறந்த வண்ணம் உள்ளனர். வடகிழக்கு பருவமழை வேறு தொடங்கவுள்ள நிலையில் இந்த காய்ச்சலால் தமிழகமே பீதிஅடைந்துள்ளது.
டெங்கு தடுப்பு முறைகள்
தமிழக அரசும் அரசு அதிகாரிகளுடன் அவ்வப்போது ஆய்வு நடத்தி டெங்குவை கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டெங்கு தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
டெங்கு தடுப்பு கூட்டம்
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டெங்கு ஒழிப்பு குறித்து மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் ஆலோசனைகளை வழங்கினர்.
கவனம் செலுத்தாத...
இந்நிலையில், கூட்டத்தில் கலந்து கொண்ட பெண் அதிகாரி ஒருவர், டெங்கு தடுப்பு குறித்த ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளாமல், குறிப்பெடுப்பதற்காக வழங்கப்பட்ட காகிதத்தில் கோலமிட்டு பயிற்சி மேற்கொண்டார்.
குறிப்பெடுத்த அதிகாரி
அருகில் இருந்த மற்றோரு பெண் அதிகாரி, டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை குறிப்பெடுத்துக் கொண்டிருந்த நிலையில், அதை கண்டுகொள்ளாமல் அவர் கோலமிடுவதிலேயே முழு கவனத்தையும் செலுத்தினார். டெங்கு காய்ச்சலால் பொதுமக்கள் மாண்டு வரும் நிலையில் அதற்கான கூட்டத்தை அலட்சியப்படுத்துவது சரியா என்றும் அந்த பெண் அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.