தமிழகத்தில் 4 நாட்களுக்கு இடியோடு மழை பெய்யுமாம்… சொல்கிறார் ரமணன்
சென்னை: இலங்கை அருகே வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஓரிரு நாட்களில் தொடங்க உள்ள நிலையில் தென்மாவட்டங்களில் மழை தீவிரம் அடைந்து வருகிறது. குறிப்பாக தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதையொட்டி உள்ள இலங்கை, கன்னியாகுமரி கடல் பகுதியில் கடந்த சிலநாட்களாகவே வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உருவானது. இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்தது. தற்போது இந்த சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதால் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இன்று தமிழ்நாட்டின் தென் பகுதியில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் சில இடங்களில் இன்று மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென்மேற்கு வங்க கடலில் வரும் 26ம்தேதி புதிய ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உதயமாகியுள்ளது.
அது வரும் 27ம் தேதி வடக்கு நோக்கி நகரும் போது கடல் கொந்தளிக்கும் நிலை ஏற்பட வாய்ப்பிருப்பதால், மீனவர்கள் கவனமாக இருக்க வேண்டும். மேல் அடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மழை தொடரும். சென்னையில் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும். நாளை முதல் 3 நாட்கள் தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் ரமணன் கூறியுள்ளார்.