நில பத்திரப்பதிவுக்கு ரூ11,500 லஞ்சம்: ஊழல் ஒழிப்பு நாளில் கடலூர் துணை கலெக்டர் கைது
கடலூர்: நிலப் பத்திரப் பதிவுக்கு ரூ11,500 லஞ்சம் வாங்கியதாக கடலூர் மாவட்ட தனி துணை கலெக்டர் தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் பெரியகாட்டுசாகை கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் ராஜா. இவர் அதே பகுதியில் 35 சென்ட் நிலம் வாங்கியுள்ளார். அந்த நிலத்தை பத்திரபதிவு செய்வதற்காக குறிஞ்சிப்பாடி அலுவலகத்துக்கு சென்ற போது முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த கடலூருக்குச் செல்லுமாறு கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து கடலூர் மாவட்ட புதிய ஆட்சியரகத்திலுள்ள முத்திரைத்தாள் அலுவலகத்திற்குச் சென்று அங்குள்ள முத்திரைத்தாள் தனித்துணை ஆட்சியர் தாஸை சந்தித்துள்ளார். அப்போது நிலத்தின் மதிப்பை குறைத்து ரூ.8,500க்கு பதிவு செய்வதாகவும், அதற்கு ரூ.11,500 சேர்த்து மொத்தம் ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தாஸ் கேட்டுள்ளார்.
இது குறித்து லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜா கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
அவர்கள் கொடுத்த ஆலோசனைப்படி தாஸிடம் அவரது ஓட்டுநர் பிரபாகரன் லஞ்சப் பணத்தை வழங்கினார். அப்போது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவு துணைக் கண்காணிப்பாளர் இருவரையும் கையும் களவுமாக கைது செய்தனர்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊழல் ஒழிப்புத் தின உறுதிமொழியேற்கப்பட்ட சிறிது நேரத்திலேயே துணை கலெக்டர் தாஸ் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications