Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்வர் ஸ்டாலின் அறிவித்த மாநில உரிமைகளுக்கான நீதிபதி குரியன் ஜோசப் குழுவின் பணிகள் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை:" மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும், ஒன்றிய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திடவும், உச்ச நீதிமன்ற மேனாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் குழு" அமைக்கப்படுவதாக தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பேசியதாவது:மாநிலங்களின் உரிமை பறிக்கப்பட்டு வரும் இந்த இக்கட்டான சூழலில், கூட்டாட்சிக் கருத்தியலை வலியுறுத்தும் வகையிலும், ஒன்றிய - மாநில அரசுகளின் உறவுகளை, அதற்குரிய கொள்கைகளை மேம்படுத்திடவும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிக்கூறுகள், நடைமுறையிலுள்ள சட்டங்கள், ஆணைகள் ஆகியவற்றை அனைத்து நிலைகளிலும் ஆராய்ந்து மறுமதிப்பீடு செய்திடவும் மற்றும் அதற்குரிய நடவடிக்கைகளை அரசுக்குப் பரிந்துரை செய்திடவும், உயர்மட்ட அளவிலான குழு ஒன்றினை அமைப்பதென்பது மிக, மிக அவசியமாக வந்திருக்கிறது.

நீதிபதி குரியன் ஜோசப் குழு

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும், மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திடவும், உச்ச நீதிமன்ற மேனாள் நீதியரசர் குரியன் ஜோசப் அவர்களைத் தலைவராகக் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.

நீதிபதி குரியன் ஜோசப் குழு உறுப்பினர்கள்

இதன் உறுப்பினர்களாக, இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணை வேந்தரும், ஓய்வுபெற்ற I.A.S. அதிகாரியுமான அசோக் வர்தன் ஷெட்டி அவர்களும், தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் மேனாள் துணைத்தலைவர் பேராசிரியர் மு.நாகநாதன் அவர்களும் இருப்பார்கள். இந்த உயர்நிலைக் குழு, பின்வரும் கொள்கைகள் குறித்து ஆய்வை நடத்தும் என்றும் அறிவிக்கிறேன்.

நீதிபதி குரியன் ஜோசப் குழுவின் பணிகள் என்ன?

1) மத்திய- மாநில அரசுகளின் உறவு நிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிகளையும், நடைமுறையிலுள்ள சட்டங்கள், ஆணைகள், கொள்கைகள் மற்றும் ஏற்பாடுகளின் அனைத்து நிலைப்படிகளையும் உயர்நிலைக் குழு ஆராய்ந்து, மறுமதிப்பீடு செய்தல்;

2) இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தற்போதுள்ள விதிகளை உயர்நிலைக் குழு ஆராய்ந்து, காலப்போக்கில் மாநிலப் பட்டியலிலிருந்து ஒத்திசைவுப் பட்டியலுக்கு நகர்த்தப்பட்ட பொருண்மைகளை மீட்டெடுப்பது குறித்த வழிமுறைகளைப் பரிந்துரை செய்தல்;

3) மாநிலங்கள் நல்லாட்சி வழங்குவதில் உள்ள சவால்களை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்தல்;

4) நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் ஏற்படுத்தாத வகையில், நிர்வாகத் துறைகளிலும், பேரவைகளிலும், நீதிமன்றக் கிளைகளிலும், மாநிலங்கள் அதிகபட்ச தன்னாட்சி உரிமை பெற்றிட உரிய நடவடிக்கைகளை பரிந்துரை செய்தல்;

5) 1971-இல் அமைக்கப்பட்ட இராஜமன்னார் குழு மற்றும் ஒன்றிய - மாநில உறவுகள் குறித்த ஏனைய ஆணையங்களின் பரிந்துரைகளையும், 1971 முதல் நாட்டில் நிலவும் பல்வேறு அரசியல், சமூகம், பொருளாதார மற்றும் சட்டம் சார்ந்தவற்றில் இருக்கக்கூடிய வளர்ச்சியினையும் உயர்நிலைக் குழு கருத்தில்கொள்ளுதல் வேண்டும். இவற்றை ஆராய்ந்து அறிக்கைகள் வழங்கும்.

6) உ6யர்நிலைக் குழு தனது இடைக்கால அறிக்கையைப் ஜனவரி மாத இறுதிக்குள்ளும், இறுதி அறிக்கையை இரண்டு ஆண்டுகளிலும் அரசுக்கு வழங்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

7) மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திட உயர்மட்டக் குழு அமைத்திடுவது தமிழ்நாட்டின் நலன் காக்க மட்டுமல்ல; “வேற்றுமையில் ஒற்றுமை” எனும் அடிப்படையில் பரந்து விரிந்த இந்திய திருநாட்டின் அனைத்து மாநிலங்களின் உரிமைகளை காத்திடவே நாம் இன்று இந்த முயற்சியை முன்னெடுத்து இருக்கிறோம்.

தமிழ்நாட்டின் கவலை

நம் தாய்த்தமிழ் மொழியை காத்திடும் முயற்சிகளில் ஈடுபடும்போதெல்லாம், இந்தியாவின் பல பகுதிகளில் தம் இயல்பை இழந்து கொண்டிருக்கும் பிற மொழிகள் குறித்தும், அழிந்து கொண்டிருக்கும் பழங்குடியினரின் மொழிகள் குறித்தும் நாம் கவலை கொள்கிறோம் என்பதுதான் உண்மை.

பண்பாட்டு பாதுகாப்பு

ஏறு தழுவுதல் போன்ற பண்பாட்டு வடிவங்களை சிதைக்கும் முயற்சிக்கு எதிராக உலகத்தமிழர்கள் ஒன்றுபட்டு எதிர்வினை ஆற்றும் வேளையில், மணிப்பூர், நாகலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநில மக்களின் பண்பாட்டு உணர்வுகளும் உரிய முறையில் மதிக்கப்பட வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை!

உரிமையும் நிதி ஆதாரமும்

தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமங்களுக்கும் என்ன தேவை என்பதை உணர்ந்து அதற்குரிய நலத்திட்டங்களை நிறைவேற்றும் உரிமையும், அதற்கான உரிய நிதி ஆதாரமும் தேவை என்ற கருத்தை வலுவோடு நாம் முன் வைப்பது, இந்தியாவின் கேரளா, தெலங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும் பொருந்தி வருவதை அனைவரும் உணர்வார்கள்.

மாநிலங்களுக்கான அதிகாரப் பகிர்வு

மாநிலங்களுக்கு உரிய அதிகாரப் பகிர்வு மற்றும் நிதிப் பகிர்வை நாம் வலியுறுத்துவது தமிழ்நாட்டின் நலன் கருதி மட்டுமல்ல, பரந்து விரிந்த இந்திய திருநாட்டில் உள்ள குஜராத் முதல் வடகிழக்கு மாநிலங்கள் வரை, காஷ்மீர் முதல் கேரளம் வரை அனைத்து மாநிலங்களின் நலன் கருதியே நாம் நம்முடைய வாதங்களை முன் வைக்கிறோம். மாநில சுயாட்சி குறித்த விவாதங்களில் முதல் குரல் என்றுமே தமிழ்நாட்டில் இருந்துதான் ஒலிக்கத் தொடங்கும்.

தமிழ்நாட்டின் வரலாற்று கடமை

அந்த வகையில் இன்றைய காலகட்டத்தில், மக்களாட்சிக் கருத்தியலை சூழ்ந்து இருக்கும் கருமேகங்களுக்கிடையே தெளிவான ஒளி பாய்ச்சிட, காலம் நம்மை அழைக்கிறது. தேவை எழும்போதெல்லாம் நாட்டிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு, இந்த முறையும் தன்னுடைய வரலாற்றுக் கடமையை நிறைவேற்றிட முன் வருகிறது.

மாநிலத்தில் சுயாட்சி- மத்தியில் கூட்டாட்சி

வளம் செழிக்கும் மாநிலங்களே, வலிமையான நாட்டினை உருவாக்கிடும் என்ற தெளிவோடு, பேரறிஞர் அண்ணா காட்டிய வழியில், முத்தமிழறிஞர் கலைஞர் முன்வைத்த “மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி” எனும் முழக்கத்தினை செயல்படுத்தி மக்களாட்சி தத்துவத்தினை இந்தியத் திருநாட்டில் முழுமையாக மலரச் செய்வோம்! இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+