திருச்செந்தூரில் அலைமோதும் கூட்டம்: 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
திருச்செந்தூர்: ஐயப்ப சீசன் மற்றும் விடுமுறையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கூட்டம் அலைமோதுகிறது. 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் முக்கிய திருவிழாவான கந்தசஷ்டி விழா, மாசி திருவிழா, வைகாசி விசாக விழா மற்றும் ஆவணி திருவிழா நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
தற்போது ஐயப்ப சீசன், முருக பக்தர்கள் சீசனால் திருச்செந்தூர் களைகட்டியுள்ளது. ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்றுவிட்டு திரும்பும்போது திருச்செந்தூர் கோயிலுக்கும் வந்து செல்கின்றனர். மேலும் பாதயாத்திரையாக வரும் முருக பக்தர்கள் கூட்டமும் அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் கிறிஸ்துமஸ் விடுமுறை மற்றும் சனி, ஞாயிறு என தொடர்ந்து 3 நாள் அரசு விடுமுறை விடப்பட்டது. நேற்று (வெள்ளி) ஒரு நாள் மட்டும் ஊழியர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு 4 நாள் விடுமுறையில் திருச்செந்தூருக்கு ஆன்மீக சுற்றுலா வருகின்றனர்.
கடந்த 2 நாட்களாக திருச்செந்தூர் கோயிலில் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இலவச தரிசனம், ரூ.10, 20, 100 மற்றும் சிறப்பு தரிசனத்திற்கு ரூ.250 வீதம் வசூலிக்கப்படுகிறது. சிறப்பு தரிசனத்தில் 3 மணி நேரமும், ரூ.100 தரிசனத்தில் 4 மணி நேரமும் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.












Click it and Unblock the Notifications