தர்மபுரி: தாயைக் கேட்டு அழுத 2 குழந்தைகளை அடித்துக் கொன்ற தந்தை கைது
தர்மபுரி: கணவன் மனைவி தகராறில் தனது இரண்டு குழந்தைகளையும், தந்தையே கல்லால் அடித்துக் கொலை செய்தது தர்மபுரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி பெரும்பாலை கிராமத்தை பாரதி நகரை சேர்ந்தவர் மணி இவரது மகன் சதீஷ் லாரி டிரைவர். இவரது மனைவி கோகிலாஇவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. மோகனப்பிரியா (6), தமிழ்செல்வன் (4), தெய்வானை (1) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
லாரி டிரைவரான சதீசுக்கு குடிப்பழக்கம் உண்டு தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம் கடந்த வாரம் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கணவனிடம் கோபித்துக் கொண்டு கோகிலா பெரும்பாலை அருகே உள்ள காவாக்காட்டில் உள்ள தனது தாய் வீட்டுக்கு 3 குழந்தைகளையும் அழைத்துகொண்டு சென்றுவிட்டார்.
சம்பவத்தன்று மூத்த மகளை தன் தாய் வீட்டில் விட்டு விட்டு தமிழ்செல்வன், தெய்வானை ஆகிய இரு சிறு குழந்தைகளை மட்டும் அழைத்து கொண்டு மீண்டும் தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார் சதீஷ்.
தாயைப் பிரிந்து வந்த குழந்தைகள் தொடர்ந்து அழுதுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் குழந்தைகளை கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் தலை மற்றும் உடலில் சரமாரியாக தாக்கியதில் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர். குழந்தைகளின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் 2 குழந்தைகளையும் மீட்டு பெண்ணாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 குழந்தைகளும் இறந்து போனார்கள்.
இரண்டு குழந்தைகளை கொன்று விட்டு தப்பி ஓடிய தந்தை சதீசை பெரும்பாலை போலீசார் டாஸ்மாக் கடையில் வைத்து கைது செய்தனர். இந்த சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.