என்னை விட்டு போய்விட்டீர்களே!... கவலை தோய்ந்த முகத்துடன் தயாளு அம்மாள் மவுன கண்ணீர்
கருணாநிதியின் உடலுக்கு அவரது மனைவி தயாளு அம்மாள் கவலை தோய்ந்த முகத்துடன் அஞ்சலி செலுத்தினார்.
Recommended Video
சென்னை: கருணாநிதியின் உடலுக்கு அவரது மனைவி தயாளு அம்மாள் கவலை தோய்ந்த முகத்துடன் அஞ்சலி செலுத்தும் காட்சிகள் நெஞ்சை உருகு வைத்தன.
கருணாநிதி கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலையில் திங்கள்கிழமை பின்னடைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவரது உடல்நிலையை காண தயாளு அம்மாள் காலை 11.30 மணிக்கு காவேரி மருத்துவமனைக்கு சக்கர நாற்காலியில் அழைத்து செல்லப்பட்டார்.
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கருணாநிதி சிகிச்சை பெறும் போதெல்லாம் இதுவரை தயாளு அம்மாள் சென்றதில்லை. முதல் முறையாக அவரை காண காவேரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதும் தொண்டர்கள் வேதனை அடைந்தனர்.
இந்நிலையில் அவர் நேற்று மாலை 6.10 மணிக்கு மரணமடைந்தார். இதையடுத்து அவரது கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது.
அங்கு அவரது உடலுக்கு அருகே தயாளு அம்மாள் சிறிது நேரம் அமரவைக்கப்பட்டார். அப்போது கருணாநிதியை இனி எப்போது பார்ப்பேன் என்று கவலை தோய்ந்த முகத்துடன் காட்சியளித்தது நெஞ்சை உருக்கும் வகையில் இருந்தது.
இத்தனை நாட்கள் கம்பீரமாக இருந்த கருணாநிதி கண்ணாடி பெட்டிக்குள் இருக்கிறார் என்பதை பார்க்கும் தயாளு அம்மாளின் பார்வை ஆயிரம் சோகங்களை கூறுகிறது. இந்த உருக்கமான காட்சியை பார்த்துவிட்டு ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கண்ணீர் விட்ட காட்சியும் நெகிழ வைத்தது.
யாராக இருந்தாலும் சரி எந்த பதவியில் இருந்தாலும் சரி துணை என்பது வேண்டும் என்பதை துணை இழந்த தயாளு அம்மாளின் கண்கள் காட்டுவது போல் இந்த படம் உள்ளது.