ஓபிஎஸ் தரப்பும் பணத்தை வாரியிறைத்ததா?.. சரவணன் கிளப்பிய பரபரப்பு! #MLAsForSale
சென்னை: எம்எல்ஏக்களுக்கு சசிகலா தரப்பு மட்டும் பணம் கொடுக்கவில்லை. மாறாக ஓபிஎஸ் தரப்பும்தான் பண ஆசை காட்டி வருவதாக அப்போதே கூறப்பட்டது. அது உண்மைதான் என்பதை சரவணன் பேச்சு நிரூபிப்பதாக அமைந்துள்ளது.
டைம்ஸ் நவ் ஸ்டிங் ஆபரேஷனில் வெளியான வீடியோவில் இதுகுறித்து சரவணன் கூறியுள்ளார். அதில் ஓபிஎஸ் தரப்பிலிருந்து ரூ. 1 கோடி தருவதாக கூறினார்கள் என்று தெரிவித்துள்ளார் சரவணன். தற்போது ஓபிஎஸ் தரப்பிடம்தான் அவர் இருக்கிறார்.
அப்படியானால் ஓ.பி.எஸ். தரப்பில் இருக்கும் மற்ற எம்எல்ஏக்களுக்கும் இதேபோல பணம் வாரியிறைக்கப்பட்டதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
டைம்ஸ் நவ் ஸ்டிங்
டைம்ஸ் நவ் - மூன் டிவி நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் சிக்கிய சரவணன் கொடுத்துள்ள தகவல்கள் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. மிகப் பெரிய அளவில் பணத்தை வாரியிறைத்து ஜனநாயகத்தையும், மக்கள் அளித்த தீர்ப்பையும் கேவலப்படுத்தியுள்ளனர் இரு தரப்பு அதிமுகவும் என்பதை இந்த ஸ்டிங் ஆபரேஷன் நிரூபிப்பதாக உள்ளது.
பல கோடியைக் கொட்டிய சசிகலா
சசிகலா குரூப் தனது ஆதரவு எம்எல்ஏக்களுக்கு பல கோடிகளை வாரியிறைத்துள்ளது சரவணன் பேச்சு மூலம் தெரிய வந்துள்ளது. தலைக்கு ரூ. 2 கோடி முதல் ரூ. 10 கோடி வரை கைமாறியதாக தெரிகிறது. அதிகபட்சமாக 3 பேருக்கு மட்டும் தலா ரூ.10 கோடி வரை தரப்பட்டதாக சரவணனே கூறியுள்ளார்.
பஸ்ஸில் - ஏர்போர்ட்டில் - ரிசார்ட்டில்
பஸ்ஸில் ஏறியபோது ஒரு ரேட், விமான நிலையத்தில் ஒரு ரேட், ரிசார்ட் போனதும் இன்னொரு ரேட் என தாறுமாறாக பணத்தைக் கொடுத்து எம்எல்ஏக்களை அமுக்கியது சசிகலா குரூப் என்ற செய்தி மக்களை அதிர வைத்துள்ளது.
தப்பி வந்த சரவணன்
சரவணனும் கூட கூவத்தூர் முகாமில் இருந்தவர்தான். கடைசி நேரத்தில் அவர் அங்கிருந்து தப்பி வெளியே வந்து ஓ.பி.எஸ் அணியில் இணைந்தார். ஸ்டிங் வீடியோவில் ஓ.பிஎஸ் அணியும் பணம் கொடுத்ததாக அவர் கூறியுள்ளதும் மக்களை அதிர வைத்துள்ளது.
மற்றவர்களுக்கும் பணம் போனதா
ஓபிஎஸ் தரப்பு ரூ. 1 கோடி வரை பேரம் பேசியதாக சொல்லியுள்ளார் சரவணன். அப்படியானால் ஓபிஎஸ் தரப்பிடமிருந்து மற்றவர்களும் பணம் வாங்கினார்களா என்ற பெரும் சந்தேகமும், கேள்வியும் வலுத்துள்ளது.